கணவனுடன் வாக்குவாதம்.. 3 குழந்தைகளுடன் கால்வாயில் குதித்து மனைவி தற்கொலை
- நான்கு பேரையும் காணாததையடுத்து, அகிலேஷின் பெற்றோர் அவர்களைத் தேடத் தொடங்கினர்.
- அவர்கள் நான்கு பேரின் உடல்களும் துணியால் ஒன்றாகக் கட்டப்பட்டிருந்தன
உத்தரப் பிரதேசத்தில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனைவி மூன்று குழந்தைகளுடன் கால்வாயில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
இறந்தவர்கள் பண்டா மாவட்டத்தில் உள்ள ரிசௌரா கிராமத்தை சேர்ந்த ரீனா (30), மற்றும் அவரது குழந்தைகள் ஹிமான்ஷு (9), அன்ஷி (5), மற்றும் பிரின்ஸ் (3) என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை இரவு, ரீனாவுக்கும் அவரது கணவர் அகிலேஷுக்கும் இடையே குடும்பப் பிரச்சினை காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு, அவர் தனது குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
மறுநாள் காலை, நான்கு பேரையும் காணாததையடுத்து, அகிலேஷின் பெற்றோர் அவர்களைத் தேடத் தொடங்கினர்.
கால்வாய் அருகே ரீனா மற்றும் அவரது குழந்தைகளின் உடைகள், வளையல்கள், செருப்புகள் மற்றும் பிற பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனையடுத்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, காணாமல் போனவர்கள் கால்வாயில் குதித்திருக்கலாம் எனச் சந்தேகித்தனர். நீண்ட தேடலுக்குப் பிறகு, ரீனா மற்றும் அவரது மூன்று குழந்தைகளின் உடல்கள் கால்வாயில் இருந்து கண்டெடுக்கப்பட்டன. உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.
அவர்கள் நான்கு பேரின் உடல்களும் துணியால் ஒன்றாகக் கட்டப்பட்டிருந்தன என்று போலீசார் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் அகிலேஷை கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.