இந்தியா

கெஜ்ரிவால் கைதை கண்டித்து 'இந்தியா' கூட்டணி சார்பில் டெல்லியில் பேரணி அறிவிப்பு

Published On 2024-03-24 11:34 GMT   |   Update On 2024-03-24 11:34 GMT
  • அமலாக்கத்துறை, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது
  • மோடி அரசு சட்டவிரோதமாக மத்திய விசாரணை அமைப்புகளை பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளது

டெல்லி முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து 'இந்தியா' கூட்டணி சார்பில் மார்ச் 31-ம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் மாபெரும் பேரணி நடத்த இருப்பதாக 'இந்தியா' கூட்டணிக் கட்சிகள் அறிவித்துள்ளது.

எதிர்க்கட்சிகள் மீதான ஒன்றிய அரசின் அடக்குமுறையை கண்டித்தும், நாட்டின் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும்' என்ற கருப்பொருளில் எதிர்க்கட்சிகளின் பேரணி நடக்கிறது. இந்த பேரணியில் திமுக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கவுள்ளன

டெல்லி மதுபான கொள்கையில் ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த வியாழக்கிழமை கைது செய்தது. அவரை மார்ச் 28ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து தற்போது அவர் அமலாக்கத்துறையின் விசாரணையின் கீழ் உள்ளார்

இதனையடுத்து, மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள் குறிவைக்கப்படுவதாக குற்றம்சாட்டியும், அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் போராட்டம் நடத்துவதற்காக இந்தியா கூட்டணித் தலைவர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர்.

அதில், எதிர்க்கட்சிகளைக் குறிவைத்து சமீபத்தில் நடந்த அனைத்து நிகழ்வுகளும் பட்டியலிடப்பட்டுள்ளன. மேலும் எதிர்க்கட்சிகளுக்கு சமமான வாய்ப்புகள் இல்லை என்றும், எதிர்க்கட்சிகளை அடக்க மோடி அரசு இடைவிடாமல் சட்டவிரோதமாக மத்திய விசாரணை அமைப்புகளை பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

Tags:    

Similar News