தெலுங்கானாவில் இரட்டையர்களை மணந்த இரட்டை சகோதரிகள்
- பெண்கள் ஒரே மாதிரியாக இருப்பதால் சிறிது நேரம் குழப்பம் அடையவும் செய்தது.
- திருமண போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
தெலுங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த இரட்டை சகோதரர்கள் விஜய் மற்றும் வினய். பக்கத்து கிராமத்தை சேர்ந்த இரட்டை சகோதரிகள் கீர்த்தனா மற்றும் கீர்த்தி இவர்களுக்கு திருமணம் செய்து வைக்க அவர்களது பெற்றோர்கள் முடிவு செய்தனர்.
அதன்படி திருமண தேதி நிச்சயிக்கப்பட்டு உறவினர்கள், நண்பர்களுக்கு பத்திரிகைகள் வழங்கப்பட்டன. திருமண விழாவிற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தது.
நேற்று முன்தினம் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான உறவினர்கள் நண்பர்கள் கலந்து கொண்டனர். திருமண மேடையில் அருகருகே அமர்ந்திருந்த இரட்டை ஜோடிகளும் ஒரே மாதிரியான பாரம்பர உடை அணிந்து இருந்தனர்.
இது திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதே நேரத்தில் பெண்கள் ஒரே மாதிரியாக இருப்பதால் சிறிது நேரம் குழப்பம் அடையவும் செய்தது. 2 ஜோடி சகோதரர்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அம்சங்களை கொண்டு இருந்ததால் சடங்குகளின் போது சகோதரர்கள் மற்றும் சகோதரிகளை வேறுபடுத்தி பார்க்க சிரமப்பட்டனர்.
திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் மணமகன்கள், மணமகள்கள் இரட்டையர் திருமணத்தை வாழ்நாளில் ஒரே முறை மட்டுமே காணக்கூடிய நிகழ்வு என வர்ணித்தனர்.
இந்த திருமண போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.