ராகுல் காந்தி
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 500 ரூபாய்க்கு காஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் - ராகுல் காந்தி உறுதி
- குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும்.
- பொது நுகர்வோருக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என ராகுல் காந்தி கூறினார்.
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி அகமதாபாத் சென்றார். அங்கு நடைபெற்ற பேரணியில் தொண்டர்கள் மத்தியில் ராகுல் காந்தி பேசியதாவது:
குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு விவசாயிகளுக்கு இலவச மின்சாரமும், பொது நுகர்வோருக்கு 300 யூனிட் இலவச மின்சாரமும் வழங்கப்படும்.
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ 4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.
3,000 ஆங்கில வழிப் பள்ளிகளைத் திறந்து, பெண்களுக்கு இலவசக் கல்வியை வழங்குவோம். பா.ஜ.க. அரசு ஆயிரக்கணக்கான பள்ளிகளை மூடியது.
பால் உற்பத்தியாளர்களுக்கு 5 ரூபாய் மானியம் வழங்கப்படும்.
தற்போது 1,000 ரூபாய்க்கு விற்கப்படும் காஸ் சிலிண்டர்கள் 500 ரூபாய்க்கு வழங்கப்படும்.
சர்தார் படேல் விவசாயிகளின் குரலாக இருந்தார். பா.ஜ.க. ஒரு பக்கம் அவரது உயரமான சிலையை உருவாக்கியது. இன்னொரு பக்கம் அவர் யாருக்காக போராடினார்களோ அவர்களுக்கு எதிராக செயல்படுகிறது. இதுதான் பாஜகவின் உண்மையான முகம்.
குஜராத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் வாங்கிய 3 லட்சம் வரை உள்ள கடன் தள்ளுபடி செய்யப்படும்.
வேலையில்லாத் திண்டாட்டத்தை எங்களால் ஒழிக்க முடியும். குஜராத்தில் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் கவனம் செலுத்தப்படும்.
குஜராத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என உறுதியளிக்கிறேன் என தெரிவித்தார்.