இடப்பிரச்சினையில் பெண் உள்பட 3 பேர் கொலை- 7 பேர் சிக்கினர்
- இடப்பிரச்சினை காரணமாக இரு தரப்பை சேர்ந்தவர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
- கொலையில் தொடர்புடைய மற்றவர்களை தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சகர்சா:
பீகார் மாநிலத்தில் உள்ள சோகர்வா கிராம பகுதியில் இரு தரப்பினர்களுக்கிடையே இடப்பிரச்சினை காரணமாக நேற்று மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பை சேர்ந்தவர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
சிறிது நேரத்தில் இந்த கைகலப்பு மோதலாக மாறியது. இதில் இருதரப்பை சேர்ந்தவர்களும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில் பிஜ்லிதேவி என்ற பெண் மற்றும் பிரபாஸ்குமார், நவல்குமார் ஆகிய 3 பேர் பலியாகினர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பும் பதட்டமும் நிலவியது. சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் பதட்டத்தை தணிக்க அப்பகுதியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீஸ் சூப்பிரண்டு சுசில்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கொலை தொடர்பாக இதுவரை 7 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். மோதலுக்கான காரணம் மற்றும் கொலையில் சம்பந்தப்பட்ட மற்றவர்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கொலையில் தொடர்புடைய மற்றவர்களை தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.