செய்திகள்

திரிணாமுல் காங்கிரஸ், மா.கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் இணைந்தனர்

Published On 2019-05-28 11:14 GMT   |   Update On 2019-05-28 11:14 GMT
மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் மா.கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 50 கவுன்சிலர்கள் டெல்லியில் இன்று பாஜகவில் இணைந்தனர்.
புதுடெல்லி:

மேற்கு வங்காளம் மாநிலத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஆளும்  மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மிகப்பெரிய சரிவை சந்தித்தது. யாரும் எதிர்பாராத வகையில் பாஜக அதிக இடங்களை பிடித்துள்ளது.

இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரு எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மா.கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ. என மொத்தம் 3 பேர் மேற்கு வங்காளம் மாநில சட்டசபை உறுப்பினர்கள் இன்று பாஜகவில் இணைந்தனர்.

டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள பல்வேறு நகராட்சிகளை சேர்ந்த 50-க்கும் அதிகமான கவுன்சிலர்களும் பாஜகவில் இணைந்தனர். 

இந்த இணைப்பு நிகழ்ச்சியில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வார்கியா, மேற்கு வங்காளத்தை சேர்ந்த அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான முகுல் ராய், சமீபத்தில் திரிணாமுல் காங்கிரசில் இருந்து நீக்கப்பட்ட அவரது மகன் சுப்ராங்ஷு ராய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கைலாஷ் விஜய்வார்கியா, ‘மேற்கு வங்காளத்துக்கு பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்ததுபோல் பாஜகவில் இணையும் விழாக்களும் 7 கட்டங்களாக நடக்கப் போகிறது. இன்று வெறும் முதல் கட்டம்தான் முடிந்திருக்கிறது’ என்று குறிப்பிட்டார்.
Tags:    

Similar News