செய்திகள்
மோடி, அமித் ஷா வருகை - டெல்லி பாஜக அலுவலகத்தில் தொண்டர்கள் எழுச்சி முழக்கம்
பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பாஜக தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடி இன்றிரவு டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்தபோது தொண்டர்கள் முழக்கமிட்டு எழுச்சியுடன் வரவேற்றனர்.
புதுடெல்லி:
மத்தியில் மீண்டும் தேசிய ஜனநாயக கட்சி கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்ட நிலையில் இன்றிரவு சுமார் 7 மணியளவில் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்துக்கு அமித் ஷா, பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய மந்திரிகள் பலர் வருகை தந்தனர்.
அலுவலகத்தின் வாசலில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும் மேளதாள இசையுடன் உற்சாகமாக நடனமாடியும் அவர்களை வரவேற்றனர். அமித் ஷா வாழ்க, மோடி வாழ்க என்று அவர்கள் முழக்கமிட்டனர்.
தொண்டர்களின் எழுச்சியான வரவேற்பை ஏற்றுக்கொண்ட அமித் ஷாவும் மோடியும் அவர்களை நோக்கி மகிழ்ச்சியுடன் கையசைத்தனர். பின்னர் அங்கு கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய அமித் ஷா இந்த வெற்றிக்காக அரும்பாடுபட்ட தொண்டர்களுக்கும் கட்சி பிரமுகர்களுக்கும் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.
மேற்கு வங்காளம் மாநிலத்தில் மிகப்பெரிய வன்முறை சம்பவங்கள் வாக்குச்சாவடிகள் மீது தாக்குதல்கள் இவை அத்தனையையும் கடந்து அங்கு நாம் 18 இடங்களை பெற்றுள்ளோம்.
50 ஆண்டுகால இந்திய தேர்தல் வரலாற்றில் இதற்கு முன்னர் எந்த கட்சியும் இதுபோல் தொடர்ந்து இரண்டாவது முறையாக இப்படிப்பட்ட மகத்தான வெற்றியை பெற்றதில்லை. பிரதமர் மோடி தலைமையிலான நல்லரசு மீண்டும் அமைய வேண்டும் என்று விரும்பி மகத்தான வெற்றியை அளித்த வாக்காளர்களை வணங்கி நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.