செய்திகள்

பொதுச்சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தில் டிடிவி தினகரன் மனு

Published On 2019-03-26 11:23 GMT   |   Update On 2019-03-26 11:23 GMT
பாராளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் தங்களுக்கு பொது சின்னம் ஒதுக்கக் கோரி டிடிவி தினகரன் சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #LSPolls #TTVDhinakaran #PressureCookerSymbol
புதுடெல்லி:

டிடிவி தினகரனின் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதேசமயம் வரும் தேர்தலில் அமமுக தரப்புக்கு பொது சின்னம் ஒதுக்குவது பற்றி பரிசீலிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

குக்கர் சின்னம் கிடைக்காதது டிடிவி தரப்புக்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது. அதேசமயம், உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலை ஏற்று வேறு பொது சின்னத்தை ஒதுக்குமாறு கூறியிருப்பதால் அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தேர்தல் ஆணையம் ஆராய்ந்து வருகிறது.

இந்த  தீர்ப்பு குறித்து டிடிவி தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறுகையில், “அமமுகவின் 59 வேட்பாளர்களையும் சுயேட்சைகளாக கருதி ஒரே பொது சின்னம் ஒதுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. பொது சின்னம் வழங்கும்படி  உத்தரவிட்டிருப்பதன்மூலம், மகத்தான வெற்றியை பெற்றிருக்கிறோம். அமமுக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர் பட்டியல் தரப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி, பொது சின்னம் ஒதுக்க தலைமை தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிடக்கோரி தேர்தல் ஆணையத்தை அணுக உள்ளோம்” என்றார்.



இந்நிலையில்  உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பாராளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் தங்களுக்கு பொது சின்னம் ஒதுக்கக் கோரி டிடிவி தினகரன் சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.  #LokSabhaElections2019 #LSPolls #TTVDhinakaran #PressureCookerSymbol
Tags:    

Similar News