செய்திகள்

உணவை வீணாக்கினால் அபராதம் - தெலுங்கானா ஹோட்டலில் அதிரடி நடவடிக்கை

Published On 2019-02-09 06:38 GMT   |   Update On 2019-02-09 06:38 GMT
தெலுங்கானாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் உணவை வீணாக்குபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. #Foodwaste #Hotelcollectfine
வாராங்கல்:

நம்மில் பெரும்பாலானோருக்கு வீட்டில் சாப்பிடும்போது, பாதி உணவை உண்ணாமல் குப்பை தொட்டிகளில் போடும் வழக்கம் உள்ளது. வீட்டில் மட்டுமல்லாது வெளியே ஹோட்டல்களிலும் இதுபோன்று செய்வதுண்டு. ஹோட்டலில் புதிய உணவுகள் இருந்தால் ருசிபார்க்க முதலில் ஆர்டர் செய்துவிட்டு, பின்னர் பிடிக்கவில்லை என்றால் அதனை கொட்டுவதும் புதிதல்ல.

இதுபோன்று உணவின் அருமை தெரியாமல் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தெலுங்கானாவின் ஹோட்டல் ஒன்று புதிய நடவடிக்கை ஒன்றை அறிமுகப்படுத்தி, செயல்படுத்தி வருகின்றது.

தெலுங்கானாவின் வாராங்கல் பகுதியில் கேதாரி உணவகம் உள்ளது. இங்கு பல மக்களும் வாடிக்கையாளர்களாக இருந்து வருகின்றனர். இந்நிறுவனத்தில் தரமான உணவுகள் வழங்குவது மட்டுமல்லாமல் உணவை வீணாக்குவதை தடுப்பதும் தங்கள் குறிக்கோளாகும் என ஹோட்டலின் உரிமையாளர் லிங்காலா கேதாரி கூறினார்.

உணவை வீணாக்குவதை தடுப்பதற்காக, அந்த ஹோட்டலின் வாசலில் உணவு வகைகளின் போர்ட்டுடன் சேர்ந்து இதற்கான விளம்பர பலகையும் வைக்கப்பட்டுள்ளது. சாப்பிட்டபின் தட்டில் உணவு மீதம் இருந்து அதனை குப்பைகளில் கொட்ட நேர்ந்தால், வாடிக்கையாளர்கள் ஒரு தட்டிற்கு ரூ.50 கட்டாயம் அபராதம்  செலுத்த வேண்டும் என அந்த விளம்பர பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பினை செய்து, இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் இந்த அபராதத் தொகை தற்போது ரூ.14000 வரை வசூல் செய்யப்பட்டுள்ளது என லிங்காலா தெரிவித்தார். இந்த புதிய நடவடிக்கையால் தற்போது உணவு வீணாவது வெகுவாக குறைந்துள்ளது எனவும், ஆர்டர் செய்வதிலும் கவனமாக உள்ளனர் எனவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இதுபோன்ற அறிவிப்பினை செய்த பின்னரும் வாடிக்கையாளர்களின் வருகை அதிகரித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கூறிய அவர்,  வாடிக்கையாளர்களுக்கு உணவு பிடிக்கவில்லை என்றால், அபராதம் தர இருப்பதாகவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. #Foodwaste #Hotelcollectfine
Tags:    

Similar News