செய்திகள்

பெங்களூரில் சென்னை என்ஜினீயரை காரில் கடத்தி பணம் பறிப்பு - 8 மணி நேரம் அடித்து உதைத்த கொடூரம்

Published On 2019-02-04 09:18 GMT   |   Update On 2019-02-04 09:18 GMT
பெங்களூரில் குடும்ப நிகழ்ச்சிக்காக சென்ற சென்னை என்ஜினீயரை காரில் கடத்தி 8 மணி நேரம் அடித்து உதைத்து ரூ.45 ஆயிரம் பணத்தை பறித்து சென்ற கும்பலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூர்:

பெங்களூரை சேர்ந்தவர் அனுராக் சர்மா. என்ஜினீயரான இவர் சென்னையில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

அனுராக் சர்மா தனது குடும்ப நிகழ்ச்சிக்காக பெங்களூர் சென்றார். அதன் பிறகு சென்னை செல்ல தனியார் பஸ்சுக்காக இரவு 12 மணிக்கு பூம்மாசன்ட்ரா பஸ்நிலையத்தில் காத்து இருந்தார்.

அப்போது கார் ஒன்று வந்தது. அதில் இருந்த 2 பேர் அனுராக் சர்மாவை திடீரென்று காருக்குள் தூக்கி போட்டு கடத்தி சென்றனர். பின்னர் பஸ் நிலையத்தில் இருந்த மேலும் 2 பேர் காருக்குள் ஏறிக் கொண்டனர். அவர்கள் அனுராக் சர்மாவை சரமாரியாக அடித்து உதைத்தார்கள்.

இரும்பு கம்பியால் அவரது காலில் தாக்கினார்கள். பின்னர் அவரது கண்களை துணியால் கட்டி இரவு முழுவதும் அடித்து உதைத்தனர்.

காலை 9 மணி அளவில் அனுராக் சர்மாவிடம் இருந்த ஏ.டி.எம். கார்டை பறித்தனர். அதன் ரகசிய எண்ணை சொல்லும்படி அவரிடம் கேட்டனர். ஆனால் அவர் சொல்ல மறுத்ததால் மீண்டும் சரமாரியாக தாக்க தொடங்கினார்கள்.

இதனால் அனுராக் சர்மா ஏ.டி.எம். ரகசிய எண்ணை கொள்ளை கும்பலிடம் தெரிவித்தார். இதையடுத்து அந்த கும்பல் ஏ.டி.எம். மையத்திற்கு சென்று அனுராக் சர்மா கார்டில் இருந்து ரூ.45 ஆயிரத்தை எடுத்தனர். பின்னர் அவரை சந்திரபுரா பகுதியில் காரில் இருந்து தள்ளிவிட்டு தப்பினர்.

படுகாயத்துடன் தவித்த அனுராக் சர்மா அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். இதுகுறித்து அவர் போலீசில் புகார் செய்தார். போலீசாரிடம் அவர் கூறும்போது, கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் அடிக்கடி ராகுல், உமேஷ் என்ற பெயர்களை உச்சரித்தப்படி இருந்தனர் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி பூராலிங்கயா கூறும்போது, “குற்றவாளிகளை 2 நாட்களில் பிடித்து விடுவோம். கொள்ளை தொடர்பாக துப்பு கிடைத்துள்ளது. குற்றவாளிகளை கண்டறிந்து விட்டோம்” என்றார். #tamilnews
Tags:    

Similar News