செய்திகள்

சபரிமலைக்கு சென்ற பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுமா? உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

Published On 2019-01-18 03:19 GMT   |   Update On 2019-01-18 03:19 GMT
சபரிமலைக்கு சென்ற இரு பெண்களும் தங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. #Sabarimala #SabarimalaVerdict
புதுடெல்லி:

சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலில், அனைத்து வயது பெண்களையும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28–ந் தேதி அப்போதைய உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு கூறியது. உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த கேரள அரசு தீவிரம் காட்டி வருகிறது.  இதற்கு எதிராக கேரளாவில் தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது.



இதற்கு மத்தியில் கேரளாவைச் சேர்ந்த கனகதுர்கா ( 44), பிந்து (42) ஆகிய இரு பெண்கள் பலத்த பாதுகாப்புடன் சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழிபட்டனர். பாதுகாப்பு கருதி, இவர்கள் இருவரும் மாநில அரசின் பாதுகாப்பின் கீழ் உள்ளனர். இந்த சூழலில், கடந்த செவ்வாய்க்கிழமை மலப்புரத்தில் உள்ள தனது கணவர் வீட்டுக்கு கனகதுர்கா சென்றார். அப்போது, கனகதுர்காவை அவரது மாமியார் கடுமையாக தாக்கியதாக கூறப்பட்டது. இதில் கனகதுர்கா பலத்த காயம் அடைந்தார். உடனடியாக மருத்துவமனையில் கனகதுர்கா அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், சபரிமலை கோவில் சென்று வழிபட்ட இரு பெண்களும், தங்களுக்கு பாதுகாப்பு கருதி உச்சநீதிமன்றத்தில் மனு செய்தனர்.

அந்த மனுவில், “அனைத்து வயதுப் பெண்களையும் சபரிமலை கோவிலில் தரிசனம் செய்ய அனுமதிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். எங்களின் உயிருக்கு அச்சுறுத்தல் எழுந்துள்ளதால், வாரத்தில் ஏழு நாள்களும் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும். எங்களுக்கு எதிராக தவறான சொற்களைப் பயன்படுத்துபவர்கள், சமூக வலைதளங்களில் எங்களை விமர்சிப்பவர்கள் ஆகியோருக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தனர். இந்த மனு உச்ச நீதிமன்றத்தில்  இன்று விசாரணைக்கு வரவுள்ளது. #Sabarimala #SabarimalaVerdict
Tags:    

Similar News