செய்திகள்

ரபேல் விவகாரத்தில் விசாரணை கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு - சுப்ரீம் கோர்ட்

Published On 2018-12-13 12:56 GMT   |   Update On 2018-12-13 13:03 GMT
ரபேல் விவகாரத்தில் விசாரணை கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் நாளை காலை 10 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. #RafaleDeal #RafaleCase #SupremeCourt
புதுடெல்லி:

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் பெருமளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. ரபேல் போர் விமானங்களுக்கு விலை நிர்ணயம் செய்ததில் தொடங்கி, பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதற்கு ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்தது வரை ஊழல் நடந்திருப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டுகிறார். 

ரபேல் ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி உள்ளிட்டோர் பொதுநல வழக்குகள் தொடர்ந்தனர்.



இந்த வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ரபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களை  தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் ரபேல் விலை விவரங்கள் அதில் இடம்பெறவில்லை.

இதற்கிடையே, இந்த வழக்கு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இருதரப்பிலும் காரசாரமாக நடந்த வாதம் நிறைவடைந்ததையடுத்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

இந்நிலையில், ரபேல் விவகாரத்தில் விசாரணை கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் நாளை காலை 10 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது. #RafaleDeal #RafaleCaseVerdict #SupremeCourt
Tags:    

Similar News