செய்திகள்

ஜம்மு காஷ்மீர் சட்டசபை கலைப்புக்கு எதிரான பொதுநல வழக்கு தள்ளுபடி

Published On 2018-12-10 07:08 GMT   |   Update On 2018-12-10 07:08 GMT
ஜம்மு காஷ்மீர் சட்டசபையை ஆளுநர் கலைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #JKAssembly #SupremeCourt
புதுடெல்லி:

ஜம்மு காஷ்மீரில் பாஜக-பிடிபி கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஜூன் மாதம் பாஜக தனது ஆதரவை விலக்கிக்கொண்டது. ஆட்சிக்கு பெரும்பான்மை இல்லாததால் முதல்வர் மெகபூபா முப்தி ராஜினாமா செய்தார். அதன்பிறகு எந்த கட்சியும் ஆட்சியமைக்க உரிமை கோராததால் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

ஆளுநர் ஆட்சி டிசம்பர் 18-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், கடந்த மாதம் பிடிபி,  தேசிய மாநாட்டுக் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்க முயற்சி செய்தது. இதேபோல் 2 உறுப்பினர்களை மட்டுமே கொண்ட மக்கள் மாநாட்டுக் கட்சி, பாஜக மற்றும் பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்கும் முயற்சியில் இறங்கியது.


இந்த பரபரப்பான சூழ்நிலையில், நவம்பர் 21-ம் தேதி சட்டசபையை கலைத்து ஆளுநர் சத்ய பால் மாலிக் உத்தரவு பிறப்பித்தார். இதனை எதிர்த்து பாஜக தலைவர் ககன் பாகத் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இவர் சட்டசபை கலைப்புக்கு முன்பாக, எம்எல்ஏவாக இருந்தவர்.

ககன் பாகத்தின் வழக்கு இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ்.கே.கவுல் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆளுநரின் முடிவில் தலையிட முடியாது என்று கூறிய நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்தனர். #JKAssembly #SupremeCourt
Tags:    

Similar News