செய்திகள்

சோனியா காந்தி மருமகன் ராபர்ட் வதேரா அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

Published On 2018-12-07 12:52 GMT   |   Update On 2018-12-07 12:52 GMT
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா அலுவலகத்தில் அமலாக்க துறை அதிகாரிகள் இன்று திடீரென சோதனை நடத்தினர். #RobertVadra #EnforcementDirectorateRaid
புதுடெல்லி:
 
ராபர்ட் வதேரா ஸ்கை லைட் ஹாஸ்பிடாலிட்டி பிரைவேட் லிமிடெட் எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது ராபர்ட் வதேரா தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி பிகனீர் பகுதியில் நிறைய அரசு நிலத்தை வாங்கினார். ஏழை கிராம மக்களின் மறுவாழ்வுக்காக உதவுவதாக கூறி அந்த நிலங்களை அவர் வாங்கி இருந்தார். ஆனால் பின்னர் அந்த அரசு நிலங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டன. இதில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ராஜஸ்தான் போலீசார் இது தொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரித்தனர். குற்றப்பத்திரிகைகளும் தாக்கல் செய்யப்பட்டன. இதற்கிடையே கடந்த 2015-ம் ஆண்டு அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனாலும் அவர் ஆஜராகாவில்லை.



இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள ராபர்ட் வதேராவின் அலுவலகம் மற்றும் பெங்களூரில் ராபர்ட் வதேராவுக்கு நெருக்கமானவர்களின் அலுவலகங்களுக்கும் சென்ற அமலாக்க துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். 

இந்த சோதனை தொடர்பாக எவ்வித முன் அறிவிப்பும் வழங்கவில்லை என வாத்ராவின் வக்கீல் குறைகூறியுள்ளார். 

ஏற்கனவே, நேஷனல் ஹெரால்டு வழக்கில் வருமான வரி தொடர்பான வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை மீண்டும் விசாரிக்கலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில், வதேரா அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. #RobertVadra #EnforcementDirectorateRaid
Tags:    

Similar News