செய்திகள்

எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளில் தமிழகம் மூன்றாம் இடம்

Published On 2018-12-04 06:19 GMT   |   Update On 2018-12-04 06:19 GMT
எம்எபி, எம்எல்ஏக்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் தமிழகம் மூன்றாம் இடத்தில் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #PendingCases #SupremeCourt
புதுடெல்லி:

குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்ட  அரசியல்  தலைவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்க கோரி, வழக்கறிஞரும் பாஜக தலைவருமான அஸ்வினி உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விஷயத்தில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியாவை அமிகஸ் கியூரியாக நியமித்தது.

அஸ்வினி உபாத்யாய்

இந்நிலையில், இவ்வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா தனது அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், நாடு முழுவதிலும் பல்வேறு நீதிமன்றங்களில் எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து விரிவான விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

நாடு முழுவதிலும் எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் எம்பி,எம்எல்ஏக்களுக்கு எதிராக மொத்தம் 4122 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளில் தமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிராக 321 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில், 71 வழக்குகள் மட்டுமே கீழமை நீதிமன்றங்களில் உள்ளதாகவும், மற்ற வழக்குகள் தற்போதுவரை விசாரணை நிலைக்கு வரவில்லை என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

264 வழக்குகள் மீது உயர்நீதிமன்றங்களால் இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 1991ம் ஆண்டில் இருந்து நிலுவையில் உள்ள ஏராளமான வழக்குகளில் இதுவரை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், விசாரணையை 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.  #PendingCases #SupremeCourt
Tags:    

Similar News