செய்திகள்

ரிசர்வ் வங்கியிடம் ரூ.3.6 லட்சம் கோடி கேட்டோமா? - மத்திய அரசு விளக்கம்

Published On 2018-11-09 15:08 IST   |   Update On 2018-11-09 15:08:00 IST
நிதி பற்றாக்குறையால் சிக்கித் தவிக்கும் மத்திய அரசு ரிசர்வ் வங்கியிடம் 3.6 லட்சம் கோடி ரூபாய் எதிர்பார்ப்பதாக வெளியான தகவலுக்கு நிதி விவகார செயலாளர் விளக்கம் அளித்துள்ளார். #RBI #DEASecretary
புதுடெல்லி:

பிரதமர் மோடியின் தவறான பொருளாதார கொள்கையால் மத்திய அரசு கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக மத்திய அரசு  ரிசர்வ் வங்கியிடம் இருந்து 3.6 லட்சம் கோடி ரூபாய் கேட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இதுதொடர்பாக மத்திய அரசின் நிதி விவகார செயலாளர் சுபாஷ் சந்திரா கார்க் இன்று விளக்கம் அளித்துள்ளார்.



'மத்திய அரசின் பொருளாதார கணிப்புகள் சரியான பாதையில் சென்று கொண்டுள்ளது. ஆனால், ஊடகங்களின் வாயிலாக சில தவறான தகவல்களும், கணிப்புகளும் வெளியிடப்படுகின்றன.

கடந்த 2013-14 நிதியாண்டில் 5.1 சதவீதமாக இருந்த நிதி பற்றாக்குறை 2014-15-க்கு பின்னர் படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் வெளிச்சந்தையில் இருந்து வாங்கும் கடன்களில் 70 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்துள்ளது. 2018-19 நிதியாண்டின் முதல் காலாண்டுக்குள் நிதி பற்றாக்குறை 3.3 சதவீதமாக குறையும்.

ரிசர்வ் வங்கிக்கான சரியான பொருளாதார மூலதனக் கொள்கையை வகுப்பது தொடர்பாகதான் இப்போது ரிசர்வ் வங்கியுடன் நாங்கள் ஆலோசனை நடத்தி வருகிறோம்’ என தனது டுவிட்டர் பக்கத்தில் கார்க் குறிப்பிட்டுள்ளார். #RBI #DEASecretary
Tags:    

Similar News