கருக்கலைப்புக்கு கணவன் சம்மதம் தேவையில்லை.. பெண்ணின் முடிவே போதுமானது - உயர்நீதிமன்றம் தீர்ப்பு
- 1971-ஆம் ஆண்டு மருத்துவக் கருக்கலைப்புச் சட்டத்தில் குறிப்பிடவில்லை.
- உயர்நீதிமன்ற நீதிபதி சுவீர் செகல் விசாரித்தார்.
கருக்கலைப்புக்கு பெண்ணின் விருப்பமும் சம்மதமும் மட்டுமே போதுமானது என்றும் கணவனின் சம்மதமம் தேவையில்லை எனவும் பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
பஞ்சாப்பைச் சேர்ந்த 21 வயது பெண் ஒருவர், தனது 16 வார கருவைக் கலைக்க அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
தனது கணவருடனான உறவு சரியில்லை என்றும், அவர் பிரிந்து வாழ்வதாகவும் அந்தப் பெண் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி சுவீர் செகல், "1971-ஆம் ஆண்டு மருத்துவக் கருக்கலைப்புச் சட்டத்தில் , கருக்கலைப்புக்கு கணவனின் சம்மதம் தேவை என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை.
தனது கர்ப்பத்தைத் தொடர வேண்டுமா அல்லது கலைக்க வேண்டுமா என்று தீர்மானிக்க திருமணமான பெண்ணே மிகச்சிறந்த நீதிபதி. அவருடைய விருப்பம் மற்றும் சம்மதம் மட்டுமே சட்டப்படி செல்லுபடியாகும்" என தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
அந்தப் பெண் கருக்கலைப்பு செய்து கொள்ளும் அளவுக்கு உடல் ரீதியாகத் தகுதியுடன் இருக்கிறார் என்று மருத்துவக் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் அவருக்கு கருக்கலைப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.