செய்திகள்
ராவணன் கொடும்பாவி எரிப்பு பழக்கத்தை ஒழிக்க வேண்டும் - ஜனாதிபதிக்கு பூரி சங்கராச்சாரியார் கோரிக்கை
தசரா விழாவின்போது ராவணன் கொடும்பாவிகளை எரிக்கும் பழக்கத்தை ஒழிக்க வேண்டும் என ஜனாதிபதிக்கு பூரி சங்கராச்சாரியார் அதோக்ஷஜானந்த் தேவ் திர்த்த் மஹராஜ் வேண்டுகோள் வைத்துள்ளார். #Abolishpractice #Ravanaeffigy #PuriShankaracharya
லக்னோ:
பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் உள்ள ஜோடா பதக் பகுதியருகே ராவணன் கொடும்பாவி எரிக்கப்படுவதை நின்று வேடிக்கை பார்த்த மக்கள் மீது சமீபத்தில் ரெயில் மோதிய விபத்தில் சுமார் 60 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், இந்த கோர விபத்து தொடர்பாக மதுரா நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பூரி சங்கராச்சாரியார் அதோக்ஷஜானந்த் தேவ் திர்த்த் மஹராஜ், 'தசரா விழாவின்போது ராவணன் கொடும்பாவிகளை எரிக்கும் பழக்கத்தை ஒழிக்க வேண்டும்’ என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
இதுபோன்ற கொடும்பாவி எரிக்கும் பழக்கத்தை பழமைவாதம் என்று குறிப்பிட்ட அவர், அடிப்படையான இந்து கலாச்சாரத்துக்கு எதிரான இந்த பழக்கம் பஞ்சாப்பில் நிகழ்ந்தது போன்ற சோகத்துக்கும் வழி வகுத்து விடுகிறது என்று தெரிவித்தார்.
இந்து புராணத்தின்படி, இறந்தவர்களுக்கான இறுதிச் சடங்குகள் ஒரே ஒருமுறை மட்டுமே செய்யப்பட வேண்டும். அவ்வகையில், ராவணனின் இறுதிச் சடங்குகளை ராமபிரான் முன்னிலையில் விபீஷணன் செய்து முடித்து விட்டார்.
எனவே, தசரா விழாக்களின்போது இதுபோல் கொடும்பாவிகளை கொளுத்துவதால் பெரிய அளவில் சுற்றுச்சூழலுக்கும் மாசு ஏற்படுகிறது. எனவே, இந்த பழக்கம் ஒழிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். #Abolishpractice #Ravanaeffigy #PuriShankaracharya