செய்திகள்
தூய்மை இந்தியா திட்டத்தில் களத்தில் இறங்கி செயல்பட்ட புதுச்சேரி முதல்வருக்கு பிரதமர் மோடி பாராட்டு
தூய்மை இந்தியா திட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில் களத்தில் இறங்கி செயல்பட்ட புதுச்சேரி முதல் மந்திரி நாராயணசாமிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். #CleanIndia #PMModi #Narayanasamy
புதுடெல்லி:
புதுச்சேரியில் உள்ள நெல்லித்தோப்பு பகுதியில் முதல் மந்திரி நாராயணசாமி அக்டோபர் ஒன்றாம் தேதி 'தூய்மையே சேவை' திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அப்போது, திடீரென வேட்டியை மடித்துக் கட்டிய அவர், அருகிலிருந்த கழிவுநீர் கால்வாயில் இறங்கி, மண்வெட்டியால் தூர்வாரி சுத்தம் செய்தார்.
இதையறிந்த பிரதமர் நரேந்திர மோடி, புதுச்சேரி முதல் மந்திரி நாராயணசாமிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், தூய்மை இந்தியா திட்டத்துக்கு வலுசேர்க்கவும், அனைவருக்கும் உத்வேகம் தரும் வகையிலும் முன்னுதாரணமாக திகழ்ந்த நாராயணசாமிக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார். #CleanIndia #PMModi #Narayanasamy