செய்திகள்

சித்தராமையாவே கூறிவிட்டதால் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முடியாது: தேவேகவுடா

Published On 2018-09-24 01:58 GMT   |   Update On 2018-09-24 01:58 GMT
சித்தராமையாவே கூறிவிட்டதால், கூட்டணி ஆட்சியை யாராலும் கவிழ்க்க முடியாது என்று தேவேகவுடா கூறியுள்ளார். #Siddaramaiah #DeveGowda






பெங்களூரு :



முன்னாள் பிரதமர் தேவேகவுடா ஹாசனில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சித்தராமையாவும், நானும் ஒரு காலத்தில் நல்ல நண்பர்களாக இருந்தோம். எங்களிடையே சில கருத்து வேறுபாடுகள் எழுந்ததால் அவர் காங்கிரசில் சேர வேண்டிய நிலை ஏற்பட்டது. கூட்டணி ஆட்சியை காப்பது எனது பொறுப்பு என்று குமாரசாமியிடம் சித்தராமையா உறுதி அளித்துள்ளார். சித்தராமையாவே கூறிவிட்டதால், கூட்டணி ஆட்சியை யாராலும் கவிழ்க்க முடியாது.

ஹாசன் மாவட்ட வளர்ச்சி குறித்து எச்.டி.ரேவண்ணா கனவு வைத்துள்ளார். நான் முதல்-மந்திரியாக இருந்தபோது, ஹாசனை சேர்ந்த யாருக்கும் மந்திரி பதவி கிடைக்கவில்லை. அப்போது நான் ஹாசனில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள சில முடிவுகளை எடுத்தேன். அதற்கு குறுக்கீடுகள் வந்தன.

குமாரசாமியின் முதல்-மந்திரி நாற்காலி கெட்டியாக உள்ளது. குமாரசாமிக்கு 2 முறை இதய அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இப்போது அவர் தினமும் 16 மணி நேரம் மாநில வளர்ச்சிக்காக பாடுபடுகிறார். கூட்டணி ஆட்சிக்கு எந்த அபாயமும் இல்லை. நான் முதல்-மந்திரியாக இருந்தபோது, எடியூரப்பா எதிர்க்கட்சி தலைவராக இருந்தார்.

கூட்டணி ஆட்சி மீது எடியூரப்பாவுக்கு கோபம் வருவதற்கு ஒரு காரணம் உள்ளது. 104 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள் என்ற தைரியத்தில், அவசரகதியில் எடியூரப்பா முதல்-மந்திரி பதவியை ஏற்றார். அவர் நினைத்தது போல் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற முடியவில்லை. அதனால் கூட்டணி ஆட்சி மீது அவர் கோபத்தை காட்டுகிறார்.

மத்தியில் பெரும்பான்மை இல்லாததால் வாஜ்பாய் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து நான் பிரதமரானேன். அதன் பிறகு நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத்தொடர்களில் வாஜ்பாய் தனது கோபத்தை காட்டவில்லை. சபையை நடத்தவிடாமல் செய்யவில்லை. அவர் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். கண்ணியமாக நடந்து கொண்டார்.

இவ்வாறு தேவேகவுடா கூறினார். #Siddaramaiah #DeveGowda
Tags:    

Similar News