செய்திகள்
குறிப்பிட்ட கட்சிக்காக பணியாற்ற தொண்டர்களை கேட்டுக் கொண்டதில்லை - மோகன் பகவத்
குறிப்பிட்ட ஒரு கட்சிக்காக பணியாற்ற ஆர்எஸ்எஸ் என்றும் தொண்டர்களை கேட்டுக்கொண்டது இல்லை என அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் இன்று பேசியுள்ளார். #RSSVision #MohanBhagwat
புதுடெல்லி:
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சார்பில் எதிர்கால இந்தியா என்ற 3 நாள் கருத்தரங்கம் டெல்லியில் நேற்று தொடங்கியது. இந்த கருத்தரங்கில் மத்திய மந்திரிகள், பாலிவுட் பிரபலங்கள் உள்பட பல துறைகளில் இருந்து முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கில் இன்று பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், “ஒரு குறிப்பிட்ட கட்சிக்காக பணியாற்றுவதற்காக தொண்டர்களை நாங்கள் ஒருபோதும் கேட்கவில்லை. தேசிய ஆர்வத்தில் பணியாற்றி வருபவர்களுடன் இணைந்து பணியாற்றுமாறு அவர்களிடம் கூறி வருகிறோம். ஆர்.எஸ்.எஸ் அரசியலில் இருந்து விலகியே இருக்கிறது. ஆனால், தேசிய நலன்களைப் பற்றிய கருத்துக்களைக் கொண்டுள்ளோம்” என கூறினார்.
நேற்று மோகன் பகவத் பேசும் போது காங்கிரஸ் கட்சியை வெகுவாக புகழ்ந்திருந்தார். “காங்கிரஸ் கட்சி தன்னலம் பார்க்காத பல தலைவர்களை நாட்டுக்கு தந்துள்ளது” என அவர் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.