செய்திகள்

விஜய் மல்லையா நாட்டை விட்டு தப்பி ஓடியதற்கு காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகளே காரணம் - மாயாவதி குற்றச்சாட்டு

Published On 2018-09-16 22:15 GMT   |   Update On 2018-09-16 22:15 GMT
விஜய் மல்லையா நாட்டை விட்டு தப்பி ஓடியதற்கு காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகளே காரணம் என்று மாயாவதி குற்றம்சாட்டினார். #Mayawati #VijayMallya
லக்னோ:

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தான் வசித்த அரசு பங்களாவை காலி செய்துவிட்டு லக்னோ நகரில் புது வீட்டில் குடியேறிய பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது நாடாளுமன்றம் மற்றும் விரைவில் நடைபெற இருக்கும் 5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பாக நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தல் என்றாலும் சரி, மாநில சட்டசபை தேர்தல்கள் என்றாலும் சரி எங்களுக்கு மதிப்பளித்து கணிசமான தொகுதிகளை ஒதுக்கினால் மட்டுமே கூட்டணி அமைத்து போட்டியிடுவோம். இல்லையென்றால் பகுஜன் சமாஜ் தனித்தே களம் இறங்கும்.

நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கு காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகளுக்கு சம பொறுப்பு உள்ளது. இதனால்தான் சில தொழில் அதிபர்கள் தொழில் முதலீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. நாட்டை கொள்ளையடித்து விட்டு தொழில் அதிபர் விஜய் மல்லையா இங்கிலாந்துக்கு தப்பி ஓடியதற்கும் இந்த 2 கட்சிகளுமே முக்கிய காரணம்.



பா.ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது. இது ஜனநாயகத்தின் மீது படியும் கறை ஆகும். இப்பிரச்சினையில் பா.ஜனதா ஆளும் மாநில அரசுகள் மெத்தனப் போக்கை கடைப்பிடிக்கின்றன.

2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும், மக்களை பிளவுபடுத்தி ஆட்சியை கைப்பற்ற பா.ஜனதா இதே தந்திரத்தை கையாள முயற்சிக்கிறது. கவர்ச்சிகரமான அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது. வாஜ்பாய் உயிருடன் இருந்தவரை ஒரு நாளும் பா.ஜனதா அவருடைய வழியை பின்பற்றி நடந்தது இல்லை. தற்போது பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்.சும், தங்களது தோல்விகளை மறைக்க வாஜ்பாயின் பெயரை பயன்படுத்தத் தொடங்கி உள்ளன. இதனால் எந்த பயனும் கிடைக்கப் போவதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.  #Mayawati #VijayMallya
Tags:    

Similar News