செய்திகள்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் மனைவி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

Published On 2018-09-12 12:09 GMT   |   Update On 2018-09-12 12:09 GMT
புற்றுநோயால் லண்டனில் மரணம் அடைந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் மனைவி குல்சூம் நவாஸ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் கடிதம் அனுப்பியுள்ளார். #Modicondoles #KulsoomNawaz
புதுடெல்லி:

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் தற்போது அவென்பீல்டு ஊழல் வழக்கில் சிறையில் உள்ளார். இவருடன் இவரது மகள் மரியம் நவாஸ், மருமகன் சப்தார் ஆகியோரும் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.
 
 நவாஸ் ஷரிப் மனைவி குல்சூம் நவாஸ் உடல்நலக் குறைவால் நேற்று உயிரிழந்தார். 68 வயதான இவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு லண்டனில் சிகிச்சை பெற்று வந்தார்.

தனது மனைவியின் இறுதி சடங்கில் பங்கேற்க பரோல் கேட்டு நவாஸ் ஷரிப் விண்ணப்பித்திருந்தார். அவரையும் மகள் மரியம் நவாஸ் உள்ளிட்டோரையும் 3 நாட்கள் பரோலில் விடுவித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

குல்சூம் நவாஸ் ஆன்மா சாந்தியடைய லண்டன் நகரின் ரிஜென்ட் பார்க் பகுதியில் உள்ள பெரிய மசூதியில் நாளை ‘ஜனாஸா’ தொழுகை நடைபெறுகிறது. பின்னர், அங்கிருந்து விமானம் மூலம் பாகிஸ்தானுக்கு கொண்டு வரப்படும் குல்சூமின் உடல் லாகூரில் உள்ள நவாஸ் ஷரிப் வீட்டில் நாளை அடக்கம் செய்யப்படுகிறது.



இந்நிலையில், குல்சூம் ஷரிப் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக,
நவாஸ் ஷரிப்புக்கு அவர் அனுப்பியுள்ள இரங்கல் கடிதத்தில், கடந்த 2015-ம் ஆண்டில் நவாஸ் ஷரிப் பேத்தி திருமணத்துக்கு அறிவிக்கப்படாத பயணமாக லாகூர் சென்றிருந்தபோது மறைந்த குல்சூம் ஷரிப்பை சந்தித்த நிகழ்ச்சியை நினைவுகூர்ந்தார்.

அவரது ஆன்மா இளைப்பாறல் அடையவும், அவரை பிரிந்து வாடும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் போதிய மனவலிமையை தருமாறும் இறைவனை பிரார்த்திப்பதாக அந்த கடிதத்தில் மோடி குறிப்பிட்டுள்ளார். #Modicondoles #KulsoomNawaz 
Tags:    

Similar News