செய்திகள்

காஷ்மீரில் 360 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்- மத்திய ரிசர்வ் போலீஸ் படை தலைவர் தகவல்

Published On 2018-09-10 05:52 GMT   |   Update On 2018-09-10 05:52 GMT
ஜம்மு காஷ்மீரில் கட்ந்த 2 ஆண்டுகளில் மட்டும் 360-க்கும் அதிகமான பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக மத்திய ரிசர்வ் போலீஸ் படை தலைவர் தெரிவித்துள்ளார். #RajivRaiBhatnagar #CRPF
புதுடெல்லி:

ஜம்மு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதுவரை எடுத்த நடவடிக்கைகள் குறித்து மத்திய ரிசர்வ் போலீஸ் படை தலைவர் ராஜீவ்ராய் பட்னாகர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

தவறாக வழி நடத்தப்படும் காஷ்மீர் இளைஞர்கள் தீவிரவாத அமைப்புகளில் இணைகிறார்கள். இதை தடுக்க பாதுகாப்பு படை சார்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இளம்வயது தீவிரவாதிகளை சரண் அடையும்படி வேண்டுகோள் விடுக்கிறோம்.

அவர்கள் தீவிரவாத பாதையில் தொடரும் போதுதான் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த ஆண்டு 220 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த ஆண்டு இதுவரை 142 பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.

மத்திய ரிசர்வ் போலீஸ் படை தலைவர் ராஜீவ்ராய் பட்னாகர்

இதன்படி 2 ஆண்டுகளில் மட்டும் 360-க்கும் அதிகமான பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்கள் பலர் உயிர் இழந்துள்ளனர்.

காஷ்மீர் மாநிலம் முழுவதும் 60 பட்டாலியன்களை சேர்ந்த 60 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ராணுவம், மாநில போலீசார் ஆகியோருடன் இணைந்து மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.) வீரர்கள் இணைந்து செயல்படுகிறார்கள்.

இங்கு கொரில்லா முறையில் தீவிரவாதிகள் சண்டையிடுகிறார்கள். திடீர் தாக்குதல் நடத்திவிட்டு தப்பி விடுகிறார்கள்.

எனவே பாதுகாப்பு வீரர்களுக்கு அதிநவீன கவச உடைகள், ஆயுதங்கள், வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு படை வீரர்கள் பலர் காயம் அடைகிறார்கள். என்றாலும் பொதுமக்களின் உயிர் இழப்பை தடுக்க பொறுமையுடன் செயல்படுகிறார்கள். ராணுவ ரீதியாகவும் பயங்கரவாதத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். #RajivRaiBhatnagar #CRPF
Tags:    

Similar News