ஆன்லைனில் கைது என மிரட்டல்: ரூ.90 லட்சத்தை இழந்த திருச்சி அரசு அதிகாரி
- இந்திய தண்டனைச் சட்டத்தில் ஆன்லைன் மூலமாக கைது என்ற முறை இல்லை.
- இது போன்ற மோசடி மிரட்டலுக்கு படித்தவர்களே ஏமாந்து நிற்பது வருத்தம் அளிக்கிறது.
திருச்சி:
திருச்சி ஏர்போர்ட் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 57), அரசு அதிகாரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய நபர், டெல்லியில் இருந்து பேசுவதாகவும், தன்னை ஒரு போலீஸ் அதிகாரி என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் கைதான ஒரு முக்கிய புள்ளியிடமிருந்து பல்வேறு வங்கிகளின் 147 ஏ.டி.எம். கார்டுகள் கைப்பற்றப்பட்டு உள்ளது. அதில் உங்களின் ஏ.டி.எம். கார்டும் இருக்கிறது. ஆகவே உங்களுக்கும், அவருக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அதன் பேரில் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் உங்களை ஆன்லைனின் கைது (டிஜிட்டல் அரெஸ்ட்) செய்யப் போகிறோம்.
கைது செய்யாமல் இருக்க வேண்டும் என்றால் உங்கள் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை நாங்கள் கூறும் வங்கி கணக்குக்கு அனுப்புங்கள். விசாரணைக்குப் பின்னர் நீங்கள் குற்றவாளி அல்ல என்று தெரியவந்தால் அந்த பணம் விடுவிக்கப்பட்டு மீண்டும் உங்கள் வங்கி கணக்கிற்கு வந்துவிடும் என கூறி உடனடியாக இணைப்பை துண்டித்துள்ளார்.
இதைக் கேட்டு அரசு அதிகாரியான கந்தசாமி அதிர்ச்சியில் உறைந்தார். அவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். ஒரு மகள் டாக்டராக பணியாற்றி வருகிறார். இரண்டாவது மகளுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. மகளின் திருமணத்துக்காக மனைவியின் நகைகளை அடமானம் வைத்தும், வேறு வகைகளிலும் ரூ.90 லட்சம் பணத்தை தனது வங்கி கணக்கில் இருப்பு வைத்திருந்தார்.
இந்த அபாண்ட குற்றச்சாட்டினால் மகள்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுவிடுமே என கருதி பதட்டத்தில், அவர் அந்த மோசடி பேர்வழியின் மிரட்டலை உண்மை என்று கருதி, பயந்து தனது வங்கி கணக்கில் இருந்த ரூ.90 லட்சம் பணத்தை அந்த நபர் கூறிய வங்கிக் கணக்குக்கு அனுப்பி விட்டார்.
செல்போனில் வந்த இந்த மிரட்டல் தொடர்பாக கந்தசாமி தனது மகன், மகளிடமோ அல்லது உறவினர்களிடமோ எந்தவித ஆலோசனையும் செய்யாமல், அவர்களுக்கு தெரிவிக்காமல் பணத்தை அனுப்பியுள்ளார்.
பின்னர் தான் மோசடி கும்பலிடம் பணத்தை இழந்ததை எண்ணி வருந்தினார். அதன் பின்னர் தனது நண்பரான வழக்கறிஞர் ஒருவரை சந்திக்க சென்ற போது, கந்தசாமி வழக்கத்துக்கு மாறாக சோர்வாக இருந்ததை பார்த்து என்ன வென்று கேட்டபோது நடந்த சம்பவங்களை கூறி அழுது புலம்பியுள்ளார்.
அதன் பின்னரே திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் மோசடி பேர்வழிகள் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இது தொடர்பாக திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், ஓய்வு பெற்ற அதிகாரிகளை குறிவைத்து ஆன்லைனில் கைது என மிரட்டி பணம் பறிக்கும் நூதன மோசடி சமீபகாலமாக அதிகமாக அரங்கேறி வருகிறது. இது போன்று வாரத்தில் இரண்டு புகார்கள் வருகிறது.
இந்திய தண்டனைச் சட்டத்தில் ஆன்லைன் மூலமாக கைது என்ற முறை இல்லை. இது போன்ற மோசடி மிரட்டலுக்கு படித்தவர்களே ஏமாந்து நிற்பது வருத்தம் அளிக்கிறது. மேற்கண்ட சம்பவத்தில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் ஆன்லைனில் கைது செய்வது போன்ற வீடியோ காட்சிகளையும் கந்தசாமிக்கு அனுப்பி மிரட்டி உள்ளனர். பதட்டத்தில் பணத்தை அனுப்பியுள்ளார்.
அடையாளம் தெரியாத நபர்கள் யாரேனும் உங்களுக்கு தொடர்பு கொண்டு ஆன்லைனில் கைது அல்லது வேறு காரணங்களை சொல்லி மிரட்டி பணம் கேட்டால் அச்சப்படாதீர்கள். உடனடியாக 1930 என்ற டோல் பிரீ நம்பருக்கு தொடர்பு கொண்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் பணத்தை அனுப்பி சில நிமிடங்கள் மட்டுமே ஆகியிருந்தால் அந்த வங்கி கணக்கை முடக்கி பணத்தை திரும்ப பெற முடியும். ஆகவே குடும்ப அவமானம் என்றெல்லாம் எண்ணிக் கொண்டு புகார் அளிக்காமல் இருப்பது மோசடி பேர்வழிகளுக்கு சாதகமாகி விடுகிறது. சமீபத்தில் ஓய்வு பெற்ற எல்.ஐ.சி. அதிகாரி ஒருவர் ஆன்லைனில் கைது மிரட்டலுக்கு பயந்து ரூ.27 லட்சத்தை இழந்து தவிக்கிறார் என்றனர்.