புதிய கட்சியை தொடங்கினார் பண்ருட்டி ராமச்சந்திரன்
- தேர்தலில் போட்டியிடமாட்டோம்.
- எங்களது கருத்துக்களை ஏற்றுக்கொள்கின்ற கட்சிகளுக்கு ஆதரவளிப்போம்.
சென்னை:
முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் ஒருபுறம் அடையாள அரசியலும், மற்றொரு புறம் கொள்கை அரசியலும் சூறாவளி போல் சுழன்று கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் ஒரு புதிய இயக்கத்தை நாங்கள் தொடங்குகிறோம்.
எம்.ஜி.ஆர். அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளோம். சாதி சமயம் மதத்தை தவிர்த்து புதிய சமுதாயத்தை அமைப்பது இந்த இயக்கத்தின் குறிக்கோள் ஆகும்.
திறமை இருந்தும் சிலருக்கு வாய்ப்பு இல்லாமல் போய் விடக்கூடாது என்பதற்காக, யாரும் புறக்கணிக்கப்படக்கூடாது என்பதற்காக இந்த இயக்கம் செயல்படும்.
சமத்துவம் சம வாய்ப்பு ஆகியவற்றை குறிக்கோளாக கொண்டு அறநிலை அரசியலை நாங்கள் முன்னெடுத்து செல்வோம். தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது எங்களது நோக்கம் அல்ல. தேர்தலில் போட்டியிடமாட்டோம். ஆனால் எங்களது கருத்துக்களை ஏற்றுக்கொள்கின்ற கட்சிகளுக்கு ஆதரவளிப்போம். மக்களைத் தொடர்ந்து சந்திப்போம். சுற்றுப்பயணம் செய்வோம். விஜய்க்கு கூட்டம் கூடுவது அவரது உழைப்பும் அவர் மீது வைத்துள்ள நம்பிக்கையும் தான்.
ஆனால் அவர் எம்.ஜி.ஆர். போல வர முடியுமா செயல்பட முடியுமா என்பதெல்லாம் இப்போது சொல்ல முடியாது. இந்தத் தேர்தலில் தி.மு.க.வுக்கும், விஜய்க்கும் தான் போட்டி. வருகின்ற 23-ந்தேதி காஞ்சிபுரத்தில் புதிய கட்சி தொடக்க விழா நடைபெறும் என்றார்.
பேட்டியின் போது பொதுச்செயலாளர் ஆர்.வி.ரஞ்சித் குமார், பிரேமலதா ரஞ்சித் குமார், ஜோதி ராமன், ஜோதி அம்மாள் உடன் இருந்தனர்.