தமிழ்நாடு செய்திகள்

ஆன்லைன் டிரேடிங் முதலீடு - என்ஜினீயரிடம் ரூ.9.54 லட்சம் மோசடி

Published On 2026-02-19 14:23 IST   |   Update On 2026-02-19 14:23:00 IST
  • ஒருமுறை மட்டும் லாபம் என்று ரூ.8860 மட்டும் அனுப்பி வைத்துள்ளனர்.
  • பணம் அனுப்பிய வங்கி கணக்குகள் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவை என்பது தெரிய வந்தது.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியை சேர்ந்த 26 வயது நபர் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.

இவரது செல்போனிற்கு டெலிகிராம் செயலி வாயிலாக ஒரு லிங்க் வந்தது. பின்னர் சலீம் முகமதுவை தொடர்பு கொண்டு பேசிய பெண் ஒருவர் ஆன்லைன் டிரேடிங்கில் பணம் முதலீடு செய்தால் நிறைய லாபம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். பின்னர் இதற்காக பதிவு செய்து கொள்ள டெலிகிராமில் ஒரு லிங்கையும் அனுப்பி உள்ளார். இதனை உண்மை என்று நம்பிய என்ஜினீயர் கடந்த 15.11.2025 முதல் 20.11.2025 வரை 31 ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலம் ரூ.9.63 லட்சத்தை அனுப்பியுள்ளார்.

இதில் ஒருமுறை மட்டும் லாபம் என்று ரூ.8860 மட்டும் அனுப்பி வைத்துள்ளனர். பல நாட்கள் கடந்த நிலையில் எவ்வித லாபத் தொகை வரவில்லை. இதுகுறித்து சலீம் முகமது அந்த டெலிகிராம் லிங்கில் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ஆனால் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. இதையடுத்து சலீம் முகமது ரூ.9.54 லட்சத்தை தன்னிடம் இருந்து மோசடி செய்து விட்டனர் என்பதை உணர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் தஞ்சை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் அறிவழகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் பணம் அனுப்பிய வங்கி கணக்குகள் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவை என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அந்த வங்கிகளுக்கு தஞ்சாவூர் சைபர் கிரைம் போலீசார் மெயில் அனுப்பி விசாரித்ததில் 11 வங்கிகளில் இருந்து சம்பந்தப்பட்ட வங்கி கணக்கில் பணம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News