தமிழ்நாடு செய்திகள்

தென்காசியில் நகைக்கடை உரிமையாளரை கடுமையாக தாக்கிய கும்பல்

Published On 2026-02-19 14:58 IST   |   Update On 2026-02-19 14:58:00 IST
  • பணத்தை திருப்பி தராமல் காலிப் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.
  • ஹர்ஷத் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தென்காசி:

தென்காசி நகரப்பகுதியை சேர்ந்தவர் ஹர்ஷத். இவர் தென்காசி நகரின் மையப்பகுதியில் உள்ள அம்மன் சன்னதி பஜாரில் நகைக்கடை நடத்தி வருகிறார்.

இவரிடம் சில மாதங்களுக்கு முன்பு அதே சன்னதி பஜாரில் நகைக்கடை நடத்தி வரும் உரிமையாளரான காலிப் என்பவர், தனக்குத் தெரிந்த ஒருவரின் 56 கிராம் நகை ரூ.3.5 லட்சத்திற்கு அடமானத்தில் உள்ளதாகவும், அந்த நகையை அடகில் இருந்து திருப்ப நீங்கள் பணம் கொடுத்தால், அவர் அந்த நகையை உங்களிடமே விற்பனை செய்வார் என கூறி உள்ளார்.

இந்த நிலையில், ஹர்ஷத் தன்னிடம் இருந்த ரூ3.5 லட்சம் பணத்தை காலிப்பிடம் கொடுத்து அந்த நகையை திருப்பிய நிலையில், அந்த நகை தரம் குறைந்த நகையாக இருந்துள்ளது.

அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஹர்ஷத் இது தரம் குறைந்த தங்கம் எனவும், இது எனக்கு வேண்டாம் தன்னுடைய பணத்தை திருப்பி தாருங்கள் என கூறியுள்ளார்.

ஆனால், பணத்தை திருப்பி தராமல் காலிப் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஹர்ஷத் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று இரவு ஹர்சத்தை, காலிப் உள்பட சிலர் பேச்சுவார்த்தைக்கு அழைத்து கடுமையாக தாக்கி உள்ளனர். இதுதொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹர்சத்தை தாக்கிய காலிப் மற்றும் அவரது சகோதரர்களான அஸ்லம், ஹாஜி உள்ளிட்ட 4 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News