செய்திகள்
புதுமண தம்பதி ஷைன்-கீது.

திருவனந்தபுரத்தில் மழை வெள்ளத்தில் நீந்தி சென்று மணமகளை கரம்பிடித்த வாலிபர்

Published On 2018-08-20 10:20 IST   |   Update On 2018-08-20 10:20:00 IST
திருவனந்தபுரத்தில் மழை வெள்ளத்தில் நீந்தி சென்ற வாலிபர் மணமகளை கரம்பிடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #KeralaRain #KeralaFloods
திருவனந்தபுரம்:

கேரளாவில் வரலாறு காணாத மழை காரணமாக ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சந்தித்து வரும் சோகங்கள், சோதனைகள் வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவுக்கு உள்ளது.

இந்த வெள்ளம் காரணமாக கேரளாவில் நடைபெற இருந்த ஏராளமான திருமணங்கள் தடைபட்டு உள்ளது. தற்போது வெள்ளம் வடியத்தொடங்கி உள்ளதை தொடர்ந்து திருமணங்களும் சில இடங்களில் நடைபெற்று வருகிறது.

உறவினர்களை அழைத்து மிகவும் மகிழ்ச்சியாக நடத்த வேண்டிய இந்த சுப நிகழ்ச்சி மிகவும் எளிமையான முறையிலும், போராட்டத்திற்கு மத்தியிலும் நடைபெற்று வருகிறது.

எர்ணாகுளத்தை சேர்ந்த ஷைன் என்பவருக்கும் திருவனந்தபுரம் நெடுமங்காடு பகுதியை சேர்ந்த கீது என்பவருக்கும் கடந்த சனிக்கிழமை திருமணம் நடத்த ஏற்கனவே திட்டமிட்டு இருந்தனர். இருவீட்டாரும் அதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்துவிட்டனர்.

இந்த நிலையில் எர்ணாகுளம் மழையால் பெரும் பாதிப்பை சந்தித்ததால் மணமகன் வீட்டார் நெடுமங்காடுக்கு செல்ல முடியவில்லை. இதனால் குறிப்பிட்ட நாளில் திருமணத்தை நடத்தமுடியாத நிலை ஏற்பட்டது.

நேற்று எர்ணாகுளம் பகுதியில் சற்று மழை வெள்ளம் வடிந்தது. இதை தொடர்ந்து மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மணமகள் வீட்டுக்கு புறப்பட்டனர். பல இடங்களில் வெள்ளத்தை நீந்திச் செல்லும் நிலை ஏற்பட்டது. பெரும் போராட்டத்திற்கு பிறகு நெடுமங்காடு சென்ற அவர்கள் நேற்று காலை திருமணத்தை நடத்தினார்கள். மிக குறைந்த அளவிலான உறவினர்களே இந்த திருமணத்தில் கலந்து கொள்ள முடிந்தது.

 பாலக்காடு முகாமில் திருமணம் செய்த ஜோடி.

பாலக்காடு பகுதியை சேர்ந்த சந்திரமோகன்- அனிலாவுக்கும் ஏற்கனவே திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. வெள்ள பாதிப்பு காரணமாக இவர்கள் 2 பேரின் குடும்பத்தினரும் பாலக்காடு வெள்ள நிவாரண முகாமில் தஞ்சம் அடைந்தனர். திருமணம் தடைப்பட்ட வருத்தத்தில் 2 குடும்பத்தினரும் இருந் தனர். உறவினர்கள் அறிவுரைப்படி நேற்று சந்திர மோகன்-அனிலா திருமணம் அவர்கள் தங்கியிருந்த முகாமிலேயே எளிமையாக நடைபெற்றது.  #KeralaRain #KeralaFloods
Tags:    

Similar News