செய்திகள்

கார்பரேட் அமைச்சக அதிகாரி தற்கொலை: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

Published On 2018-08-13 23:27 GMT   |   Update On 2018-08-13 23:27 GMT
கார்பரேட் அமைச்சக அதிகாரி தற்கொலை விவகாரம் தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். #Bansal #Suicide #SupremeCourt
புதுடெல்லி:

மத்திய அரசின் கார்பரேட் நலத்துறை அமைச்சகத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்த டெல்லியை சேர்ந்த பன்சால் (வயது 60) என்பவர், மருந்து நிறுவனம் ஒன்றில் இருந்து லஞ்சம் பெற்றதாக கூறி கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை 16-ந் தேதி சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டார்.



இதைத்தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் தொல்லை கொடுப்பதாக கூறி பன்சாலின் மனைவியும், மகளும் தற்கொலை செய்து கொண்டனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த பன்சாலும், தனது மகனுடன் அதே ஆண்டு செப்டம்பரில் தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலைக்கும் சி.பி.ஐ.தான் காரணம் என அவரும் கடிதம் எழுதி வைத்திருந்தார்.

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை, கோர்ட்டு மேற்பார்வையின் கீழ் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரை கொண்ட அமர்வு நேற்று விசாரித்தது.

முடிவில், இந்த விவகாரம் தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  #Bansal #Suicide #SupremeCourt
Tags:    

Similar News