செய்திகள்

பீகாரில் தொடரும் பெண் வன்கொடுமை - காப்பகத்தில் மர்மமாக இறந்த 2 பெண்கள்

Published On 2018-08-12 11:39 GMT   |   Update On 2018-08-12 11:39 GMT
பீகார் மாநிலத்தில் நாட்டையே உலுக்கிய காப்பகத்தில் பெண்கள் கற்பழிக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, மற்றொரு காப்பகத்தில் 2 இளம்பெண்கள் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளனர். #AasraShelterHome #Bihar
பாட்னா:

பீகார் மாநிலத்தில் முசாபர்ப்பூர் எனும் பகுதியில் இயங்கி வந்த சிறுமியர் காப்பகத்தில் பல சிறுமிகள் கற்பழிக்கப்பட்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் முழுவதும் பாதிக்கப்பட்டது சிறுமிகள் என்பதும் மிகவும் வேதனை அளிக்கக்கூடிய ஒன்றாக இருந்தது. இதையடுத்து, இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டு, தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பீகார் மாநிலத்தின் நேபாளி நகர் எனும் பகுதியில் இயங்கிவரும் ஆஸ்ரா பெண்கள் காப்பகத்தில் இருந்து 2 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில், அதிகப்படியான காய்ச்சல் காரணமாக அந்த பெண்கள் பாட்னா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், சிகிச்சையின்போதே அவர்கள் உயிரிழந்ததாகவும் காப்பக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆனால், அந்த 2 பெண்களும் மருத்துவமனைக்கு கொண்டுவரப்படும்போதே மரணம் அடைந்து இருந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து போலீசார் இந்த வழக்கில் தீவிரமாக விசாரித்துவருகின்றனர்.

முன்னதாக இந்த காப்பகத்தில் இருந்து 4 பெண்கள் தப்பியோடியதாகவும், காப்பகத்தின் அருகில் இருப்பவரின் தொந்தரவு காரணமாக அவர்கள் தப்பியோடியதாகவும் காப்பகம் குறித்து ஊடகங்களில் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது. #AasraShelterHome #Bihar
Tags:    

Similar News