செய்திகள்

2022-க்குள் விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்காக உயர்த்த நடவடிக்கை - மோடி

Published On 2018-06-20 12:27 IST   |   Update On 2018-06-20 12:27:00 IST
2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்காக உயர்த்தும் நோக்கத்துடன் தான் பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு நிதி ஒதுக்கீடு 2 மடங்காக உயர்த்தப்பட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். #PMmodi
புதுடெல்லி:

பிரதமர் மோடியின் தலைமையிலான ஆட்சியில் 4 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், அவரது திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து நாட்டு மக்களுடன் காணொளி மூலம் பிரதமர் மோடி பேசி வருகிறார்.

அதன்படி இன்று 600 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுடன் பிரதமர் மோடி காணொளி மூலம் கலந்துரையாடினார். அப்போது பேசிய மோடி, 2017 - 18ம் ஆண்டில் 280 மில்லியன் டன் உணவு பொருட்களின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த காங்கிரஸ் ஆட்சியுடன் ஒப்பிடும்போது 10.5 சதவிகித கூடுதல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், விவசாயிகளுக்கு மண் வளம் காப்பது குறித்தும் மண்ணின் தரம் குறித்து அறிந்து அதற்கேற்ப பூச்சிக்கொல்லிகளை உபயோகம் செய்வது குறித்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படும் எனவும், நல்ல விதைகளை தேர்ந்தெடுப்பது குறித்தும் ஆலோசனை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், விவசாயிகள் தங்களது விளை பொருட்களுக்கான விலையை எவ்வித இடைத்தரகரும் இன்றி நேரடியாக பெறுவதற்காக இ-நாம் என்ற புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளதாகவும், 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக உயர்த்தவே மத்திய அரசின் பட்ஜெட்டில் வேளாண்துறைக்கான நிதி இரட்டிப்பாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். #PMmodi 
Tags:    

Similar News