செய்திகள்

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 4 மாநில முதல்வர்கள் ஆதரவு

Published On 2018-06-17 05:04 GMT   |   Update On 2018-06-17 05:04 GMT
டெல்லி கவர்னர் அலுவலகத்தில் தர்ணா நடத்திவரும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, குமாரசாமி, பினராயி விஜயன் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். #Kejriwaldharna #Delhilg #Mamata
புதுடெல்லி:

டெல்லியில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் அரசு தலைமை செயலாளர் அன்ஷு பிரசாத் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 4 மாதங்களாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பகுதிநேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மந்திரிகளை அதிகாரிகள் சந்திக்க மறுப்பதாகவும், இதனால் அரசின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகளை பணிக்கு திரும்ப உத்தரவிடுமாறும் துணைநிலை கவர்னர் அனில் பைஜால் கேட்டுக் கொண்டார். ஆனால் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தொடர்ந்து மந்திரிகளை புறக்கணிக்கின்றனர்.

இந்த நிலையில் துணைநிலை கவர்னர் பைஜாலை கடந்த 11-ந் தேதி மாலை கெஜ்ரிவால் சந்தித்தார். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணிக்கு திரும்ப உத்தரவிடுமாறும், ரேஷன் பொருட்களை வீடுகளுக்கு சென்றே வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்குமாறும் கோரினார்.

பின்னர் கவர்னர் அலுவலகத்திலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தை தொடங்கினார். அவருடன் துணை முதல்-மந்திரி மனிஷ் சிகோடியா, மந்திரிகள் கோயல்ராய், சத்யேந்தர் ஜெயின் ஆகியோரும் தர்ணாவில் ஈடுபட்டனர்.

இன்று ஏழாவது நாளாக தொடர்ந்து கெஜ்ரிவாலும், அவருடன் இருக்கும் 3 மந்திரிகளும் கவர்னர் மாளிகையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மேற்கு வங்காளம் முதல் மந்திரி மம்தா பானர்ஜி, ஆந்திரா முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி, கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் ஆகியோர் டெல்லி கவர்னர் மாளிகையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க கவர்னரிடன் அனுமதி கேட்டனர்.


ஆனால், இதற்கு கவர்னர் அனுமதி அளிக்க மறுத்து விட்டார். இந்நிலையில், நேற்று மாலை அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்கு சென்ற மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, குமாரசாமி, பினராயி விஜயன் ஆகியோர் அரவிந்த் கெஜ்ரிவாகின் மனைவியை சந்தித்து அவரது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

நாட்டின் தலைநகரான டெல்லியில் இப்படி நடந்தால் மற்ற மாநிலங்களின் நிலைமை என்னவாகும்?.  அரசியலமைப்பு சார்ந்த சிக்கலாக உருமாறும் முன்னர் இந்தப் பிரச்சனை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும், இல்லாவிட்டால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாக நேரிடும்.

இன்று பிரதமர் மோடியை சந்திக்கும்போது கவர்னர் - கெஜ்ரிவால் இடையே நடந்துவரும் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க தேவையான நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துவேன் என்று மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார். #Kejriwaldharna #Delhilg #Mamata
Tags:    

Similar News