செய்திகள்
மாநிலத்தின் அமைதிக்காக காலாவை திரையிடாமல் இருப்பதே நல்லது - கர்நாடக முதல்வர் குமாரசாமி
கர்நாடகத்தில் ரஜினிகாந்த்தின் காலா படத்தை திரையிடாமல் இருப்பதே நல்லது என அம்மாநில முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். #Kaala
பெங்களூர்:
காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருந்தார். இதனால், அவரது படம் கர்நாடகாவில் வெளியிடக்கூடாது என கன்னட அமைப்புகள் போர்க்கொடி தூக்கின. காலா படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், கர்நாடகாவில் காலா வெளியாக கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தடை விதித்தது.
காலா படத்தை ரிலீஸ் செய்வது குறித்து, கர்நாடக வர்த்தக சபையுடன், தேசிய திரைப்பட அமைப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில், கர்நாடகாவில் ‘காலா திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ் சார்பில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.
இன்று இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், படத்தை ரிலீஸ் செய்ய அரசுக்கு உத்தரவிட முடியாது என தீர்ப்பு வழங்கியது. அதேநேரத்தில் படம் வெளியாகும் பட்சத்தில் கர்நாடக அரசு திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, காவிரி மேலாண்மை ஆணையம் வேண்டாம் என ரஜினிகாந்த் தெரிவிக்க வேண்டும், காவிரி விவகாரத்தில் இரு மாநில அரசுகள் - விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ரஜினிகாந்த் கூற வேண்டும் என கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் சாரா கோவிந்த் நிபந்தனை விதித்திருந்தார்.
இந்நிலையில், காலா படத்தை திரையிட்டால் மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அம்மாநில முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். இதனால், காலாவை திரையிடாமல் இருப்பதே நல்லது எனவும் அவர் கூறியுள்ளார்.
கர்நாடகாவில் காலாவை திரையிட்டால் அதற்கான விளைவுகளை தயரிப்பாளர் எதிர்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.