செய்திகள்

கர்நாடக சட்டசபையில் தேசிய கீதத்துக்கு மதிப்பளிக்காத பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் - ராகுல் குற்றச்சாட்டு

Published On 2018-05-19 12:05 GMT   |   Update On 2018-05-19 12:05 GMT
கர்நாடக சட்டசபையில் இன்று எடியூரப்பா ராஜிமாமா செய்த பின்னர் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் தேசிய கீதத்துக்கு மதிப்பளிக்காமல் வெளியேறியதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். #nationalanthem #rahulgandhi #karnatakaassembly
புதுடெல்லி:

கர்நாடக சட்டசபையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது போதிய எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இல்லாததால் முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். பின்னர், அவையை விட்டு அவர் வேகமாக வெளியேறியதும், சட்டசபையை தேதி குறிப்பிடாமல் ஒப்படைப்பதாக தற்காலிக சபாநாயகர் போபையா அறிவித்தார். 

அப்போது, வழக்கமாக இசைக்கப்படும் தேசிய கீதம் ஒலிபரப்பானது. சில எம்.எல்.ஏ.க்கள் மட்டும் தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்தும் வகையில் நின்றிருந்தனர். ஆனால், பலர் அவசரமாக வெளியே செல்வதில் குறியாக இருந்தனர்.

இந்நிலையில், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் தேசிய கீதத்துக்கு மதிப்பளிக்காமல் வெளியேறியதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி அடுத்தடுத்து வெளியிட்டுள்ள பதிவில், ‘கர்நாடக மாநிலத்தில் எம்.எல்.ஏ.க்களை வெளிப்படையாக விலைக்கு வாங்குவதை பிரதமர் மோடி நேரடியாக ஆதரித்ததை மக்கள் பார்த்தனர்.


எனவே, நாட்டில் ஊழலை ஒழிப்பேன் என்று அவர் பேசி வருவது அப்பட்டமான பொய் என்பதும் அவரே ஊழல்வாதி என்பதும் தெளிவாக புரிகிறது. பா.ஜ.க.வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நின்றதை எண்ணி நான் பெருமைப்படுகிறேன்.

கர்நாடக சட்டசபையில் இன்று அனைத்து நிகழ்ச்சிகளும் முடிந்த பின்னர் எம்.எல்.ஏ.க்களும், தற்காலிக சபாநாயகரும் தேசிய கீதத்துக்கு மதிப்பளிக்காமல் வெளியே சென்றதை கவனித்தீர்களா? ஆட்சி, அதிகாரத்தில் இருந்தால் அரசின் எந்த அமைப்பையும் அவமரியாதைப்படுத்த இவர்கள் தயங்க மாட்டார்கள் என்பது தெரிகிறது’ என குறிப்பிட்டுள்ளார். #nationalanthem #rahulgandhi #karnatakaassembly 
Tags:    

Similar News