செய்திகள்

இந்த ஆண்டு இறுதிக்குள் 4 கோடி இல்லங்கள் மின்சார வசதி பெறும் - மோடி அறிவிப்பு

Published On 2018-05-19 10:02 GMT   |   Update On 2018-05-19 10:02 GMT
இந்தியாவில் சுதந்திரம் பெற்ற 70 ஆண்டுகளில் மின்சாரமே பார்க்காத 4 கோடி வீடுகளுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் மின்சார வசதி அளிக்கப்படும் என ஜம்மு காஷ்மீரில் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். #modispeech #modivisitJ&K #electricityforall
ஸ்ரீநகர்:

ஜோசிலா சுரங்கப்பாதையின் அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீருக்கு ஒரு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். அவரது வருகைக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய மோடி, ‘இந்தியா சுதந்திரம் அடைந்து சுமார் 70 ஆண்டுகளில் மின்வசதியே பெறாத கிராமங்கள் இன்றும் உள்ளன. 2014-ம் ஆண்டு நாங்கள் அரசு அமைக்கும்போது அனைவருக்கும் மின்சாரம் வழங்க வேண்டும் என்ற கொள்கையுடன் ஆட்சிக்கு வந்தோம். அதன்படி மின்வசதியே இல்லாத கிராமங்களுக்கு மின்வசதி அமைத்துக் கொடுத்துள்ளோம்.

இருப்பினும் இன்னமும் சுமார் 4 கோடி இல்லங்களில் மின்சார வசதி இல்லை. அடுத்த ஒரு வருடத்துக்குள் அந்த 4 கோடி வீடுகளுக்கும் மின்வசதி அமைத்துக் கொடுக்கப்படும். ஜம்மு காஷ்மீரிலும் 70 ஆண்டுகளாக மின்சார வசதியே இல்லாத 19 கிராமங்களுக்கும் மின்சார வசதி வழங்கப்படும்.

சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கு லடாக் பகுதி மிகச்சிறந்த இடம் ஆகும். இந்த இடத்தில் அதிகபட்சமான சூரிய மின்சக்தியை நம்மால் தயாரிக்க முடியும், அதற்கான உழைப்பை துவங்குவோம்’

இவ்வாறு அவர் பேசினார். #modispeech #modivisitJ&K #electricityforall
Tags:    

Similar News