13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- வடமாநில வாலிபர் கைது
- இந்த புகாரை பெற்றுக்கொண்டு தப்பிஓடிய வாலிபர் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
- வாலிபரான மோனுவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திருச்செங்கோடு:
கொக்கராயன்பேட்டை பாப்பம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. அரசு பள்ளியில் படித்து வரும் சிறுமியிடம் கடந்த 4-ந்தேதி அன்று முகவரி கேட்பது போல் செல்போனில் ஆபாச படம் காண்பித்து வாலிபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து வீட்டிற்கு வந்த சிறுமி நடந்தவற்றை பெற்றோரிடம் கூற, அவர்கள் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அமுதாவிடம் சிறுமியை அழைத்து சென்று புகார் அளித்தனர்.
இந்த புகாரை பெற்றுக்கொண்டு தப்பிஓடிய வாலிபர் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, வாலிபரின் மோட்டார் சைக்கிள் நம்பரை வைத்து விசாரணை நடத்தியதில் அந்த வாலிபர் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் என்றும் ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துக்குளி சாவடி பாளையம் பகுதியில் வசித்து வருவதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் வடமாநிலத்தை சேர்ந்த வாலிபரான மோனுவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.