உள்ளூர் செய்திகள்

நெல்லை அருகே பஸ் நிறுத்தம் மீது மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி

Published On 2023-06-13 14:05 IST   |   Update On 2023-06-13 14:08:00 IST
  • தருவை பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்தது.
  • போலீசார் 2 பேரையும் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

நெல்லை:

நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே உள்ள தருவை அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கபெருமாள். இவரது மகன் சக்திவேல்(வயது 23). கூலி தொழிலாளி.

நேற்று நள்ளிரவு இவர் தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த கதிர்வேல்(23) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் அம்பை சாலையில் சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை சக்திவேல் ஓட்டிச்சென்றார். தருவையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்தது.

அப்போது அப்பகுதியில் இருந்த பஸ் நிறுத்தம் மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர். இதுகுறித்து தகவல் அறிந்த முன்னீர்பள்ளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரையும் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சக்திவேல் பரிதாபமாக இறந்தார். கதிர்வேலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News