- காளீஸ்வரி கல்லூரியில் கணித மன்றத்தின் சார்பில் மாநில அளவிலான போட்டிகள் நடந்தது.
- 17 கல்லூரிகளைச் சேர்ந்த 256 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் கணித மன்றத்தின் சார்பில் மாநில அளவில் கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகள் நடைபெற்றன. துறைத்தலைவி லலிதாம்பிகை வரவேற்று பேசினார். கல்லூரியின் துணை முதல்வர் பாலமுருகன் சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது, மாணவர்களின் பன்முக திறமைகளை வெளிக்கொணர்வதே இதன் நோக்கமாகும் என்றார்.
இதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு வினாடி-வினா போட்டி, கட்டுரை வாசித்தல், சிக்கலான கணக்குகளை தீர்த்தல், கணித வண்ண கோலம், மவுனமொழி, வடிவியல் முறை வரைதல், எண் தகுதி தேர்வு ஆகியவை நடைபெற்றன. இதில் 17 கல்லூரிகளைச் சேர்ந்த 256 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ஒட்டுமொத்த புள்ளிகளின் அடிப்படையில் சிவகாசி அய்யநாடார்-ஜானகி அம்மாள் கல்லூரி முதல் பரிசையும், சிவகாசி எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரி 2-ம் பரிசையும் பெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கல்லூரி துணை முதல்வர் பரிசுகளை வழங்கினார். உதவி பேராசிரியை காளீஸ்வரி நன்றி கூறினார்.