உள்ளூர் செய்திகள்

வெவ்வேறு விபத்துகள்: தனியார் நிறுவன மேலாளர் உள்பட 3 பேர் பரிதாப சாவு

Published On 2022-12-07 07:34 GMT   |   Update On 2022-12-07 07:34 GMT
  • விருதுநகர் அருகே நடந்த விபத்தில் தனியார் நிறுவன மேலாளர்- மூதாட்டி உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
  • சிவகாசி டவுன், திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விருதுநகர்

திருத்தங்கல் அண்ணா நகரைச் சேர்ந்தவர் துரைப்பாண்டி (வயது 43). இவர் சிவகாசியில் உள்ள லாரி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு வந்த துரைப்பாண்டி மதியம் சாப்பிடுவதற்காக மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். ரெயில்வே பீடர் ரோட்டில் சென்றபோது மோட்டார் சைக்கிள் நிலைத்தடுமாறி விபத்துக்குள்ளானது.

இதில் படுகாயமடைந்த துரைப்பாண்டியை அங்கிருந்தவர்கள் மீட்டு மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி துரைப்பாண்டி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மகள் அர்ச்சனா கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மம்சாபுரத்தைச் சேர்ந்தவர் பாண்டியம்மாள் (60). இவர் சம்பவத்தன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சகோதரி வீட்டுக்கு புறப்பட்டார். கிருஷ்ணன் கோவிலில் உள்ள கண் ஆஸ்பத்திரி முன்பு பாண்டியம்மாள் நின்றிருந்தபோது அந்த வழியாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பாண்டியம்மாள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் ஸ்ரீகிருஷ்ணன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருத்தங்கல்லைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (47). கேரளாவில் வேலை பார்த்து வந்த இவர் சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று கறி வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்ற பழனிச்சாமி மீது கார் மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். அவரது மனைவி லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News