உள்ளூர் செய்திகள்

வந்தவாசியில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

Published On 2022-08-16 14:34 IST   |   Update On 2022-08-16 14:58:00 IST
  • வாலிபர் கொலை வழக்கில் நடவடிக்கை
  • ஜெயிலில் உள்ள 3 பேரிடமும் உத்தரவு நகல் வழங்கப்பட்டது.

வந்தவாசி:

வந்தவாசி அடுத்த நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் விஜய் (வயது 21). இவர் தங்களுக்கு சொந்தமான மளிகைக் கடையை கவனித்து வந்தார்.

இவருக்கும் வந்தவாசியை அடுத்த ராமசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த மொய்தீன்(35) என்பவருக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது.

மேலும் நல்லூரைச் சேர்ந்த நாராயணசாமி(32), இவரது உறவினர் வரதன்(41) ஆகியோர் விஜய்யின் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பதாக அளித்த தகவலின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்ததால் இவர்களுக்கிடையே முன்விரோதம் இருந்தது.

இந்த நிலையில் மொய்தீன், நாராயணசாமி, வரதன் ஆகிய 3 பேரும் சேர்ந்து கடந்த ஜூன்12-ஆம் தேதி இரவு விஜய்யை வரவழைத்து அவரைக் கொலை செய்து உடலை தீ வைத்து எரித்தனர்.

இது தொடர்பாக வழக்குப்பதிந்த தெள்ளார் போலீசார் மொய்தீன், நாராயணசாமி, வரதன் ஆகிய 3 பேரையும் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் மொய்தீன், நாராயணசாமி, வரதன் ஆகிய 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய திருவண்ணாமலை கலெக்டருக்கு போலீஸ சூப்பிரண்டு கார்த்திகேயன் பரிந்துரை செய்தார்.

இதன்பேரில் 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க கலெக்டர் பா.முருகேஷ் உத்திரவிட்டார்.

இதையடுத்து வேலூர் மத்திய சிறையில் உள்ள 3 பேரிடமும் இதற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News