உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

பள்ளி மாணவர்களுக்கு வன உயிரின வார விழா விழிப்புணர்வு பேச்சுப்போட்டி

Published On 2022-09-27 08:04 GMT   |   Update On 2022-09-27 10:58 GMT
  • பொதுமக்கள், பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
  • மாணவ, மாணவிகளுக்கு, பேச்சுப்போட்டி மற்றும் வினாடி வினா போட்டிகள் நடந்தன.

உடுமலை :

ஆண்டு தோறும், வன உயிரின வார விழா அக்டோபர் முதல் வாரம் கொண்டாடப்படுகிறது. இரு ஆண்டு இடைவெளிக்குப்பின் நடப்பாண்டு ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூர் வனக்கோட்டத்தில் இவ்விழா கொண்டாடப்படுகிறது.பொதுமக்கள், பள்ளி மாணவர்களுக்கு வனம், வன விலங்குகள் குறித்தும், இயற்கை காப்பதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

அதன் அடிப்படையில், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப்போட்டிகள் நடத்தப்படுகிறது. , உடுமலை ஆர்.ஜி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி மற்றும் வினாடி வினா போட்டிகள் நடந்தன.ஆனைமலை புலிகள் காப்பக உதவி வன பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குனர் கணேஷ்ராம் தலைமை வகித்தார். பள்ளி வளாகத்தில், மாணவர்களுடன், அதிகாரிகள் மரக்கன்று நடவு செய்து, விழா துவங்கியது. தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு, பேச்சுப்போட்டி மற்றும் வினாடி வினா போட்டிகள் நடந்தன.திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட, அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

அமராவதி நகர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளியில் உள்ள மாணவர்கள், பேச்சுப்போட்டியில் ஆர்வமாக பங்கேற்றனர். தளிஞ்சி வயல் மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்த மாணவர்கள், வனம் காப்பதன் அவசியம் குறித்து பேசியது வனத்துறையினர் மற்றும் மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.இப்போட்டியில் பங்கேற்று முதல் பரிசு பெறும் மாணவர்கள் சென்னையில் நடைபெறும் வன உயிரின வார விழா போட்டியில் பங்கேற்பார்கள் எனவும் அனைத்து மாணவர்களுக்கும், பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில், உடுமலை வனச்சரக அலுவலர் சிவக்குமார், ஆர்.ஜி.,எம் பள்ளி மேலாளர் கார்த்திகேயன் மற்றும் வனத்துறையினர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

வன உயிரின வார விழாவில் ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டிகள் இணைய வழி வாயிலாக நடக்கிறது. ஓவியப்போட்டி, வன உயிரினங்கள் பாதுகாப்பில் நமது பங்களிப்பு 'வன உயிரினங்களை பாதுகாத்தலின் அவசியம் ஆகிய தலைப்பிலும், கட்டுரை போட்டி, 'மனித- வன உயிரினங்களுக்கு இடையிலான சக வாழ்வு' என்ற தலைப்பிலும் நடக்கிறது. எல்.கே.ஜி., முதல் கல்லூரி வரையிலான பிரிவுகளில், மாணவ மாணவிகள் தங்களது, ஓவியம் மற்றும் கட்டுரை விபரங்களை wlw2020atrtpr@gmail.com என்ற இணையதளத்தில், வரும் 28ந் தேதி, மாலை 5:30 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News