உடல்நிலை சரியில்லை; பணம் அனுப்பி வைங்க..நூதன முறையில் பொதுமக்களிடம் பணமோசடியில் ஈடுபடும் கும்பல்
- நான் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் உள்ளேன்.
- மறுநாள் நலம் விசாரிக்க நண்பரை அழைத்தபோதுதான் மோசடி என்பது தெரிந்தது.
காங்கயம்,
நண்பர்கள் போல எஸ்.எம்.எஸ்.., அனுப்பி மருத்துவ தேவைக்கு பணம் தேவைப்படுவதாக மோசடி செய்வது அதிகரித்துள்ளது.இது சம்பந்தமாக சைபர் கிரைம் போலீசில் ஏராளமான புகார்கள் வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:-
மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் நண்பர் போல மொபைல் போனில், நான் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் உள்ளேன். செலவுக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது' என்று கூறி ரூ.5ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை அனுப்பி வைக்க கோரி மோசடி செய்து வருகின்றனர்.இதனை மோசடி நபர்கள் இரவு 10 மணிக்கு மேல் வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் ஆக அனுப்புகின்றனர். சில நாட்களுக்கு முன் ஒருவரிடம் பணத்தை மோசடி செய்து உள்ளனர். அவரின் நண்பர் லண்டனில் உள்ளார்.
அந்த வெளிநாட்டு நண்பரின் வாட்ஸ் ஆப், டி.பி., படத்தை வைத்து அவரின் செல்போன் எண்ணுக்கு ரூ.1 லட்சம் கேட்டு மெசேஜ் வந்துள்ளது.அவரது நண்பர் ஏற்கனவே அவரிடம் தனக்கு உடல்நலக்குறைவு என்று கூறியிருந்ததால், அதை உண்மை என்று நம்பி ரூ.1 லட்சம் அனுப்பி வைத்தார். மறுநாள் நலம் விசாரிக்க நண்பரை அழைத்தபோதுதான் மோசடி என்பது தெரிந்தது.அவர் அளித்த புகாரின்படி, விசாரித்து வருகிறோம்.
எனவே இதுபோன்று மெசேஜ் வந்தால் பொதுமக்கள் நம்பவேண்டாம்.சம்பந்தப்பட்டவரை தொடர்பு கொண்டு உண்மை தன்மை அறிந்து உதவ வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்