உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஒரு பயனாளிக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய போது எடுத்த படம். கலெக்டர் கிறிஸ்துராஜ், மாநகராட்சி 4-ம் மண்டல தலைவர் இல.பத்மநாபன் ஆகியோர் அருகில் உள்ளனர்.

48 பேருக்கு விலையில்லா வீட்டுமனை பட்டா அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்

Published On 2023-06-10 05:57 GMT   |   Update On 2023-06-10 05:57 GMT
  • முதல் அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
  • காங்கயம் வட்டார மருத்துவமனை தற்போது மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது.

காங்கயம் :

காங்கயம் அருகே சம்மந்தம்பாளையம் பிரிவு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வருவாய் துறையின் சார்பில் விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார். விழாவில் பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்களை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கி பேசியதாவது:- முதல் அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் மாவட்டத்திற்கு ஒரு தலைமை மருத்துவமனை இருக்கிறது. திருப்பூர் மாவட்டத்திற்கு மக்களின் மருத்துவ தேவையை அறிந்து 2 தலைமை மருத்துவமனை தந்திருக்கிறார். அதில் ஒன்று காங்கயம் வட்டார மருத்துவமனை தற்போது ரூ.12 கோடி செலவில் மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த மருத்துவமனைக்கு தேவையாக புதிய கட்டிடம் 30 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டும் பணி நடைபெற்று கொண்டுள்ளது. படியூர் ஊராட்சியில் ஆரம்ப சுகாதார மையம் வேண்டும் என கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், தற்போது அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழாவில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் தாராபுரம் தாலுகா வடசின்னாரி பாளையம் ஊராட்சி பகுதியைச் சேர்ந்த 41 பேருக்கும், வருவாய்த் துறையின் சார்பில் வெள்ளகோவில் நகராட்சி பகுதியைச் சேர்ந்த 6 பேருக்கும், சின்னமுத்தூர் கிராம பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் என மொத்தம் 48 பேருக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டது.

தொடர்ந்து கருணாநிதி பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு காங்கயம் ஊராட்சி ஒன்றியம், பரஞ்சேர்வழி ஊராட்சி, சென்னிமலை சாலை, நல்லிகவுண்டன் வலசு பகுதியில் நெடுஞ்சாலை துறையின் சார்பில் மரக்கன்றுகள் நடும் பணியினை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்சசியில் திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டல தலைவர் இல. பத்மநாபன், குண்டடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சிவ.செந்தில்குமார், திருப்பூர் தெற்கு மாவட்ட துணை தலைவர் ராசி முத்துக்குமார், வெள்ளகோவில் நகரதி.மு.க. செயலாளர் சபரி எஸ்.முருகானந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News