உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

வாழை, தென்னை மரங்களுக்கு உரிய இழப்பீடு - கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை

Published On 2023-06-01 08:21 GMT   |   Update On 2023-06-01 08:21 GMT
  • விவசாய பம்பு செட்டுகளுக்கான மும்முனை மின்சாரம் 14 மணி நேரம் வழங்கப்பட்டு வந்தது.
  • பயிர்களுக்கு போதிய நீர்ப்பாய்ச்ச முடியாமல் அவதிப்படுகிறார்கள்.

திருப்பூர் :

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் மதுசூதனன் பேசியதாவது:- அவினாசி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் வாழை, மஞ்சள், சோளம், மரவள்ளிக்கிழங்கு ஆகியவற்றை ஏராளமான விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இவர்களின் விவசாய பம்பு செட்டுகளுக்கான மும்முனை மின்சாரம் காலை 6 மணி முதல் 12 மணி வரையும், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையும் என 14 மணி நேரம் வழங்கப்பட்டு வந்தது. இப்போது தினமும் 9 முதல் 10 மணி நேரம் மட்டுமே குறிப்பிட்ட நேரமில்லாமல் வினியோகிக்கப்படுவதால் விவசாயிகள் சிரமப்படுகிறார்கள். பயிர்களுக்கு போதிய நீர்ப்பாய்ச்ச முடியாமல் அவதிப்படுகிறார்கள். முன்பு போல் 14 மணி நேரம் முறைப்படி மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்.

அவினாசி தாலுகாவுக்கு உட்பட்ட சேவூர், பாப்பான்குளம், காசிலிங்கம்பாளையம் பகுதிகளில் மழை பெய்தபோது ஏற்பட்ட சூறாவளிக்காற்றால் வாழை மற்றும் தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்துவிட்டன. இதுபோல் பல்லடம் தாலுகாவுக்கு உட்பட்ட தெற்கு அவினாசிபாளையம், அலகுமலை, பொங்கலூர் ஊராட்சிகளில் ஏராளமான வாழை, தென்னை மரங்கள் சாய்ந்துவிட்டன. இதன்காரணமாக விவசாயிகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. முறையாக கணக்கெடுப்பு செய்து உரிய இழப்பீடு மற்றும் இன்சூரன்சு தொகை பெற்றுத்தர வேண்டும். பயிர்களுக்கு இன்சூரன்சு செய்வதை விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குளத்தில் வண்டல் மண் அள்ளுவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

Similar News