உள்ளூர் செய்திகள்

கோவை எம்.பி., பி.ஆர்.நடராஜன் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று கொண்ட காட்சி.

பல்லடம் கேத்தனூரில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற கோவை எம்.பி.,

Published On 2022-07-14 11:58 GMT   |   Update On 2022-07-14 11:58 GMT
  • அரசு பள்ளிகளில் வகுப்பறை, கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் போதாத நிலை உருவாகியுள்ளது.
  • ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ.3600 மட்டுமே வழங்கப்படுகிறது.

பல்லடம் :

பல்லடம் அருகே கேத்தனூரில் கோவை எம்.பி. நடராஜன் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். கேத்தனூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு கோவை எம்.பி., பி.ஆர்.நடராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கேத்தனூர் ஊராட்சியில் சீரான குடிநீர் விநியோகத்தை மேம்படுத்த 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை தொட்டி கட்ட தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு ஏழரை சதவீதம் மருத்துவ படிப்பு படிக்க தனி இட ஒதுக்கீடு மற்றும் 6 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு கல்லூரி மேல்படிப்புக்கு மாதம் ரூ.ஆயிரம் உதவி தொகை வழங்கப்படும் என்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பால் அரசு பள்ளிகளில் தங்களது குழந்தைகளை பெற்றோர் சேர்த்து வருகின்றனர். குறிப்பாக தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கும் பெற்றோர் அப்பள்ளிகளில் இருந்து தங்களது குழந்தைகளை விடுவித்து அரசு பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். அதனால் அரசு பள்ளிகளில் வகுப்பறை, கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் போதாத நிலை உருவாகியுள்ளது. இது குறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும். அதே போல் ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ.3600 மட்டுமே வழங்கப்படுகிறது. அத்தொகையை உயர்த்தி வழங்கிட தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் குமார், ஊராட்சி தலைவர் சித்ரா ஹரிகோபால், ஒன்றிய கவுன்சிலர்கள் ஸ்ரீ பிரியா புருஷோத்தமன்,லோகு பிரசாத், வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஷ்வரன் மற்றும் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர்கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News