தேனீ வளர்ப்பு பயிற்சி-விவசாயிகளுக்கு அழைப்பு
- நிலம் இல்லாத விவசாய தொழிலாளர்களுக்கு பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
- திங்கள் முதல் வெள்ளி வரை 30 நாட்களுக்கு பயிற்சி நடைபெறும்.
உடுமலை :
தமிழக அரசு வழிகாட்டுதல்படி தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு சில பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டு, நிலம் இல்லாத விவசாய தொழிலாளர்களுக்கு பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.இது குறித்து உடுமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் மோகனரம்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தோட்டக்கலைத்துறை வாயிலாக இந்தாண்டு பூங்கொத்து, பூ அலங்காரம் செய்தல், நுண்ணீர் பாசன அமைப்புகள் நிறுவுதல் மற்றும் பராமரிப்பு செய்தல் தேனீ வளர்ப்பு தொழில்நுட்பம் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.இப்பயிற்சியில் நிலம் இல்லாத விவசாய தொழிலாளர்கள் பயன்பெறலாம். உடுமலை தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் 30 நாட்கள் பயிற்சி வழங்கப்படும்.
வார வேலை நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை 30 நாட்களுக்கு பயிற்சி நடைபெறும்.வருகை பதிவேடு பராமரிக்கப்பட்டு பயிற்சியில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு 30 நாட்களுக்கான போக்குவரத்து செலவாக நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் வீதம் பயிற்சியில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு வங்கி கணக்கில் செலுத்தப்படும்.பெண்கள் ,ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இப்பயிற்சியானது முதலில் பதிவு செய்யும் 10 நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.இப்பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள நபர்கள் நாளை 26ந் தேதிக்குள் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயிற்சிக்கான விண்ணப்பங்களை பெற்று சமர்ப்பிக்கலாம்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.