#Congress போட்டியிடும் தொகுதிகள்-வேட்பாளர்களை தேர்வு செய்ய குழு வருகை: நாளை மறுநாள் ஆலோசனை
- 4 பேர் கொண்ட தேர்வு குழுவினர் நாளை மறுநாள் சென்னை வருகிறார்கள்.
- ஒவ்வொரு தொகுதிக்கும் 3 வேட்பாளர்கள் பெயரை இந்த குழுவினர் தேர்வு செய்வார்கள்.
சென்னை:
வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் 28 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
காங்கிரஸ் போட்டியிட விரும்பும் 35 தொகுதிகள் அடங்கிய பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அகில இந்திய தலைமை நியமித்துள்ள சிங்தியோ தலைமையிலான 4 பேர் கொண்ட தேர்வு குழுவினர் நாளை மறுநாள் (புதன்கிழமை) சென்னை வருகிறார்கள்.
சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டசபை குழு தலைவர் ராஜேஷ்குமார் மற்றும் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்கள்.
அப்போது காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதிகள் மற்றும் அந்த தொகுதியில் போட்டியிட தகுதியான வேட்பாளர்கள் பற்றி முடிவு செய்கிறார்கள். ஒவ்வொரு தொகுதிக்கும் 3 வேட்பாளர்கள் பெயரை இந்த குழுவினர் தேர்வு செய்வார்கள்.
இந்த குழுவினரின் தேர்வு பட்டியலின் அடிப்படையில் எந்தெந்த தொகுதிகள் என்று தி.மு.க.வுடன் பேசி முடிவு செய்ததும் போட்டியிடும் தொகுதிகள் மற்றும் ஒவ்வொரு தொகுதிக்கும் தகுதியான 3 நபர்களை தேர்வு செய்து டெல்லிக்கு அனுப்புவார்கள். அதன் பிறகு டெல்லி ஒப்புதல் அளித்ததும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.