உள்ளூர் செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட லாரி.

லாரியில் ரகசிய அறை அமைத்து போதை பொருட்கள் கடத்தல் - பல்லடத்தில் போலீசார் மடக்கினர்

Published On 2022-10-19 10:53 IST   |   Update On 2022-10-19 10:53:00 IST
  • அரசால் தடை செய்யப்பட்ட 300 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
  • டிரைவர் லோகேஸ்வரனை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பல்லடம் :

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டை நால்ரோடு பகுதியில் பல்லடம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கண்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அதில் ரகசிய அறை அமைக்கப்பட்டு இருந்தது. சந்தேகம் அடைந்த போலீசார் சோதனை மேற்கொண்டதில் அரசால் தடை செய்யப்பட்ட 300 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து லாரியை பறிமுதல் செய்து பல்லடம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த லாரி பல்லடம் அருகேயுள்ள பருவாய் சாலை பகுதியை சேர்ந்த ஜெபர்சன் வைஸ் (வயது 33) என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. அதனை தேனி மாவட்டம் உத்தமபாளையம் கன்னிசேரவாடி பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் மகன் லோகேஸ்வரன் (23) என்பவர் ஓட்டி வந்துள்ளார். லோகேஸ்வரன் தற்போது சின்ன கோடங்கிபாளையம் கிராமத்தில் உள்ள பி.சி.ஆர் தோட்டத்தில் வசித்து வருகிறார். அவர் கண்டெய்னர் லாரியை எடுத்துக் கொண்டு காரணம்பேட்டை வந்தபோது போலீசாரின் வாகன சோதனையில் சிக்கியுள்ளார். டிரைவர் லோகேஸ்வரனை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் புகையிலை பொருட்களை எங்கிருந்து கடத்தி கொண்டு வந்தார். அதனை யாரிடம் கொடுக்க இருந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News