ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவிலில் திருவோண திருவிழா
- நான்கு திருவேங்கடமுடையான் சன்னதிகளிலும் கடந்த 10 நாட்களாக திருவோண திருவிழா நடந்து வருகிறது.
- மாலையில் நாலாயிர திவ்யப்பிரபந்தம் சாத்துமுறை, தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
தென்திருப்பேரை:
வைணவ கோவில்களில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திர நாளை பெருமாளுக்கு உகந்த நாளாக கொண்டு திருவோணத்திருவிழா நடைபெறுகிறது.
ஆழ்வார்திருநகரியில் திருவேங்கடமுடையான் 4 திசை பார்த்தும் சேவை சாதிக்கிறார். ஆதிநாதர் கோவிலில் திருவேங்கடமுடையான் மேற்குப் பார்த்தும், தெற்கு மாடவீதியில் தெற்கு திருவேங்கடமுடையான் வடக்கு பார்த்தும், வடக்கு ரத வீதியில் வடக்கு திருவேங்கடமுடையான் தெற்கு பார்த்தும், ஊரின் மேற்கே சதுர்வேதி மங்கலம் ராமானுசர் கோவிலில் திருவேங்கடமுடையான் கிழக்கு பார்த்தும் சேவை சாதிக்கிறார்.
திருவோண திருவிழா
நான்கு திருவேங்கடமுடையான் சன்னதிகளிலும் கடந்த 10 நாட்களாக திருவோண திருவிழா நடந்து வருகிறது.சதுர்வேதி மங்கலம் ராமானுசர் கோவிலில் உள்ள திருவேங்கடமுடையான் சன்னதியில் நேற்று காலை விஸ்வரூபம், ஏகாந்த சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. 11 மணிக்கு ஆச்சாரியர் வேதாந்த தேசிகர் ராமானுசர் கோவிலில் எழுந்தருளி மங்களாசாசனம் பெற்றுக் கொண்டார். மாலையில் நாலாயிர திவ்யப்பிரபந்தம் சாத்துமுறை, தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் சீனிவாசன், கோகுல் வரதராஜன், எம்பெருமானார் ஜீயர், திருவாய்மொழி பிள்ளை சுவாமி, முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.